சென்னிமலையில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி


சென்னிமலையில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி
x

சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு:

மதுரை மாநகரில் முன்பு ஒரு காலத்தில் வந்தி அம்மையார் என்ற மூதாட்டி, பிட்டு அமுது சமைத்து அதை விற்று பிழைத்து வந்தார். வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் துன்பம் அடைந்து பாண்டிய அரசனிடம் முறையிட்டனர். அப்போது அரசன் உடனடியாக மந்திரியை அழைத்து வீட்டுக்கு ஒருவர் வைகை கரைக்கு சென்று கரையை அடைக்க வேண்டும் என உத்தரவிட்டான்.

வந்தி மூதாட்டி தன்னுடைய முதுமை காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் கூலிக்கு ஆள் தேடியும் கிடைக்கவில்லை. பிறகு தான் எந்நேரமும் போற்றும் சிவபெருமானை வணங்கி கொண்டிருந்தார். அப்போது சுந்தரேச பெருமான் கூலி ஆளாக வந்தி மூதாட்டி முன்பு நின்று, தான் பிட்டு உணவையே கூலியாக பெற்று கொள்வதாக கூறி வேலைக்கு சென்று வைகை கரையை அடைத்தார்.

இறுதியில் வந்தி மூதாட்டிக்கும் பாண்டிய மன்னனுக்கும் சிவபெருமான் தரினசமாக காட்சியளித்தார். அந்த நாளே ஆவணி மாத மூல நட்சத்திர நாளாக கருதப்படுவது உண்டு. சென்னிமலையில் உள்ள கைலாசநாதர் கோயிலில் இவ்விழா கடந்த 42 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த வருட விழா இன்று கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து சென்னிமலை பார்க் ரோட்டில் வைகை கரை அமைக்கப்பட்டிருந்தது. அந்த வைகை கரைக்கு கைலாசநாதர், சிவகாமி அம்மாள் மற்றும் வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி சகடை தேரில் எழுந்தருளி வைகை கரைக்கு வந்தனர்.

சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ராமநாத சிவாச்சாரியார் மற்றும் மதி சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஓதுவார் மூர்த்தி ஆனந்த் சிவபெருமானின் பிட்டுத் திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story