கன்னியாகுமரி: பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்


கன்னியாகுமரி: பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
x

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் இன்று மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

கன்னியாகுமரி,

உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா நாளை வரை நடக்கிறது.

திருவிழவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11-30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும், மாலை 6 மணிக்கு சமய உரையும் , இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும், 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

இந்நிலையில் 9-ம்திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து காலை 7 மணிக்கு வெள்ளி பல்லக்கில் உற்சவ அம்மனை அலங்கரித்து சன்னதிதெரு, தெற்கு ரதவீதி, நடுத்தெரு வழியாக தேர் நிற்கும் கீழரதவீதிக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

அதன் பிறகு உற்சவ அம்மனை பட்டு மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்தனர். அதைத்தொடர்ந்து தேரில் எழுந்தருளி வந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் விசேஷ பூஜைகள் தீபாராதனை நடந்தது.

அதன்பிறகு 8 மணிக்கு திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைத்த நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தேரானது பகல்12-30மணிக்கு நிலைக்கு வந்தடையும் என்று எதிர்பார்கப்படுகிறது.தேர் நிலைக்கு வந்து நின்றதும் அன்னதானமும், காஞ்சி தர்மமும் வழங்கப்பட உள்ளது.

தேரோட்ட நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கலந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு தொடங்கியது.

10-ம் திருவிழாவான நாளை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டுநிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு நர்த்தனபஜனையும் நடக்கிறது. 9- மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.


Next Story