திருவண்ணாமலையில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் நாளை மறுநாள் தொடங்குகிறது..!


திருவண்ணாமலையில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் நாளை மறுநாள் தொடங்குகிறது..!
x

பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த நிலையில் மார்கழி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி, நாளை மறுநாள் 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 12.30 மணி அளவில் தொடங்கி அன்று நள்ளிரவு 11.55 மணிக்கு நிறைவடைகின்றது. எனவே 26-ந்தேதி கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக வேலூர், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.


Next Story