கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா- அதிகார நந்தியில் பக்தர்களுக்கு காட்சியளித்த சந்திரசேகரர்


பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.

சென்னை:

சென்னை மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெற்றுவருகிறது. நேற்று முன்தினம் கொடியேற்றத்தைத் தொடர்ந்து அன்னை மயில் வடிவில் சிவபூஜை செய்த காட்சி நடந்தது. இரண்டாம் நாளான நேற்று வெள்ளி சூரிய வட்டம், வெள்ளி சந்திர வட்டம், கிளி வாகனம், அன்ன வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது.

திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காலையில், அதிகார நந்தியில் சந்திரசேகரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு சாமி தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் காலை 9 மணி அளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

23-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு எம்பிரான் திருஞானசம்பந்தப் பெருமான் அபிஷேகம், அங்கம் பூம்பாவை உயிர்ப்பித்த ஐதீக விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் மதியம் 3.30 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் 63 நாயன்மார்களோடு உலா வந்து திருக்காட்சி அளிக்கிறார்.


Next Story