உதவுதல் பழகு!


உதவுதல் பழகு!
x

குருவிக்குக் கூடுகட்டிக் கொடுக்கவேண்டும் என்றால், தோப்புக்கே விளம்பரம் செய்யும் மனநிலையே இன்று மக்களிடம் நிரம்பியிருக்கிறது. ஏழைக்கு உதவ வேண்டும் எனும் எண்ணத்தை விட, ‘நான் தர்மவான்’ என்று காட்டிக்கொள்வதையே இன்றைய சமூகம் விரும்புகிறது.

எல்லோருமே இறைவனின் பிம்பங்கள் தான். இறைவனின் படைப்பில் வேறுபாடு இல்லை. ஏழையின் இதயத்துக்கும், பணக்காரனின் இதயத்துக்கும் இடையே இறைவன் படைப்பில் வேறுபாடு காட்டவில்லை.

உனக்கான நாளுக்கு இருபத்து நான்கு மணிநேரமெனில், ஏழைக்கும் அது தானே வழங்கப்பட்டிருக்கிறது. உனக்கான சூரியனும் ஏழைக்கான சூரியனும் ஒன்று தான். இறைவன் அனைத்தையும் பொதுவில் வைக்க, மனிதன் மட்டுமே பொதுவையும் தனக்குள் பதுக்கினான்.

ஒரு நிகழ்வு. அது ஒரு மாலை நேரம். அந்த அரங்கு விழாக்கோலம் பூண்டிருந்தது. மிகப்பெரிய விழா. லட்சங்களை வாரி இறைத்து அந்த விழா நடந்து கொண்டிருந்தது.மைக் அறிவிப்பை ஒலிபரப்பியது. "இப்போது, ஏழைகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி". கூட்டம் கரவொலி எழுப்பியது.

"முதலில் கணவனை இழந்த செல்லாயிக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது".

கூட்டம் கைகளைத் தட்ட, கதர் சேலையோடு அந்த ஏழைத்தாய் மேடையேறினாள். காஸ்ட்லி கேமராக்கள் வெளிச்சத்தை அவள் மேல் விசிறியடித்து புகைப்படங்களாய் அள்ளிக் கொண்டன. ஏழ்மையின் அத்தனை அம்சங்களையும் தன் முகத்தில் போர்த்தியிருந்த அவள் நடுங்கும் விரல்களால் அந்தப்பணத்தைப் பெற்றுக் கொண்டாள்.

உடலெங்கும் கூசியது. பணக்காரத்தனத்தின் முன்னால் அருகதையற்ற ஒரு ஏழையாய்த் தன்னைப் பிரகடனப்படுத்துகிறார்களே என அவளது உள்ளம் குத்தப்பட்டது. கூனிக்குறுகினாள். இருந்தாலும், அந்த அவமானங்களை எல்லாம் புறந்தள்ளி அவள் புன்னகைத்தாள்.

நம்மைச் சுற்றிலும் செல்லாயிக்கள் நிரம்பி இருக்கின்றனர். கூடவே அவர்களின் ஏழ்மையை விளம்பரப்படுத்தி அதனால் தங்களை வெளிச்சத்துக்குள் விழவைக்கும் கர்வத்தின் கனவான்களும்.ஏழைகள் எதிலும் குறைந்தவர்களல்ல. அவர்களுக்கு பொருளாதாரம் மறுக்கப்பட்டிருக்கிறது, நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அது ஒன்றே வேறுபாடு. இருப்பவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்வதே தேவையானது.

இல்லாதவர் குறைந்தவருமல்ல, இருப்பவர் பெரியவருமல்ல. இந்த வாழ்க்கையை முடிக்கும்போது வங்கிக்கணக்கின் அடிப்படையில் பேரின்ப வீடு ஒதுக்கப்படுவதுமில்லை. ஏழைக்கு உதவி செய்வது உயரிய பண்பு. ஆனால் அதை மனிதாபிமானத்தின் வாசனையோடு செய்ய வேண்டும். உதவி செய்வதால் மகிழும் மனம் இருக்க வேண்டும். உதவி என்பது பிறர் அறியாமல் செய்ய வேண்டியது.

வலது கை செய்யும் உதவி இடது கைக்குக் கூட தெரியக்கூடாது என புனித நூல்கள் அறிவுறுத்துகின்றன. நாமோ ஊருக்கே விளம்பரம் செய்து தான், நாலுபேருக்கு பருக்கைகள் கொடுக்கிறோம். விளம்பரம் செய்யும் காசை வைத்து நூறு பேருக்கு நல்லது செய்யலாம். உண்மையான உதவி என்பது முதலில் ஏழைகளை ஏழைகளாய்ப் பார்க்காமல் சக தோழர்களாய்ப் பார்ப்பது தான். அவர்களை எந்த வகையிலும் தன்னை விடக் குறைந்தவர்களாய்ப் பார்க்காமல் இருப்பது முதல் தேவை.

ஏழைகளுக்குத் தேவை நமது பொருளாதாரப் பகிர்தல் மட்டுமல்ல, அன்புப் பகிர்தல். அவர்களோடு நாமும் இணைந்திருக்கிறோம் என அவர்கள் நினைத்தால், அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல். அதுவே ஆகப்பெரிய அன்பு.

ஒரு ஏழைக்கு உதவி தேவையெனில் அவர்களுடைய குடிசைக்குச் சென்று ரகசியமாய் கொடுத்து வாருங்கள். உங்களுடைய பணத்தின் எண்ணிக்கையல்ல, உங்கள் மனதின் எண்ணங்களே முக்கியம். உள்ளதைக் கொடுப்பதும், அவர்களுக்கு உங்கள் உள்ளத்தைக் கொடுப்பதும் தான் மிகவும் முக்கியம்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஒரு செய்தியைச் சொன்னார். அவர்களுடைய ஆலயத்தில் ஏதேனும் ஏழைக்கு உதவி தேவைப்பட்டால் வசதி இருப்பவர்கள் பணத்தை ஒரு கவரில் போட்டு அவர்களுக்குத் தெரியாமல் அவர்களிடம் எப்படியாவது சேர்த்து விடுவார்களாம். யார் கொடுத்தது, யார் கொடுக்கச் சொன்னது என்பதை அறியாமலேயே அந்த ஏழைக்குத் தேவையான பணம் சென்று சேர்ந்து விடும்.

நமது ஈகை மறைவாய் இருக்கும் போது, இறைவன் நமக்கு பிரதிபலன் தருவார். நமது ஈகை தம்பட்டமாய் இருக்கும் போது இறைவனின் ஆதரவு அதற்கு எப்போதும் இருப்பதில்லை.

பிறருக்கு உதவுவது போல மகிழ்ச்சியான செயல் எதுவும் இல்லை. பிறருக்கு உதவக் கூடிய அளவுக்கு இறைவன் நம்மை வைத்திருக்கிறார் எனில் அது மிகப்பெரிய வரம் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை.

ஏழைகளை கனிவுடன் நோக்குவோம். அவர்கள் இறைவனின் குறைப்பிரசவங்கள் அல்ல, நமது மனதின் இரக்கத்தை அளந்து பார்க்க அனுப்பப்பட்டவர்கள். நம்மிடம் இருப்பது கர்வமா? கருணையா? என்பதை கண்டறிந்து சொல்பவர்கள் இவர்கள் தான்.

மனதை மாற்றுவோம். ஏழைகள் நமது உயிரின் பாகங்கள். அவர்கள் நமது சகோதரர்கள், சகோதரிகள். அவர்கள் இந்த மண்ணில் நம்மோடு பயணிப்பவர்கள். அவர்களை அரவணைப்போம். அவர்களை கனிவுடன் நோக்குவோம்.

"ஏழைக்குச் செய்த உதவியெல்லாம் எனக்குச் செய்ததே" என்கிறார் இறைவன். ரகசியமாய் உதவிகள் செய்வோம், பரமனின் அருளை நிச்சயம் பெறுவோம்.

1 More update

Next Story