பெருந்துறை, கோபி, ஊஞ்சலூரில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


பெருந்துறை, கோபி, ஊஞ்சலூரில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

பெருந்துறை, கோபி, ஊஞ்சலூரில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

ஈரோடு

ஈரோடு

பெருந்துறையில் பிரசித்தி பெற்ற வேதநாயகி உடனமர் சோழீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பெருந்துறை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

இதேபோல் கோபி அக்ரகாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், எலுமிச்சை பழம், இளநீர், பன்னீர், விபூதி, குங்குமம், சந்தனம், திருமஞ்சனம் மற்றும் வாசனைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து விசாலாட்சி விஸ்வேஸ்வரர் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு விசாலாட்சி, விஸ்வேஸ்வரர் அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். கோபி டவுன் மாதேசியப்பன் வீதியில் மாதேஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ பூஜை நடந்தது.

ஊஞ்சலூர் நாகேஸ்வர சாமி கோவிலில் நாகேஸ்வரர், அம்மன் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அர்ச்சனை, ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாகேஸ்வரர், அம்மன் நந்தி வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மேலும் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவிலில் இரட்டை நந்திக்கும், கொந்தளம் நாகேஸ்வர சாமி கோவிலில் உள்ள நந்திக்கும் பிரதோஷத்தை ஒட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டு் அபிஷேகம் நடைபெற்றது. பழனிக்கவுண்டம்பாளையம் பழனியாண்டவர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி வழிபாடு நடந்தது.


Related Tags :
Next Story