ஒணம் பண்டிகை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை செப்டம்பர் 6-ந் தேதி திறப்பு - ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது


ஒணம் பண்டிகை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை செப்டம்பர் 6-ந் தேதி திறப்பு - ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது
x

ஒணம் பண்டிகை சிறப்பு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, செப்டம்பர் 6-ந் தேதி திறக்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் ஒணம் பண்டி கையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் செப்டம்பர் மாதம் 6-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார்.

தொடர்ந்து மறு நாள் 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், நெய்யபிஷேகம், களபாபி ஷேகம், கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உட்பட சிறப்பு பூஜை, வழிபாடுகளும் நடைபெறும்.

முன்னதாக 8-ந் தேதி திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி, பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, செப்டம்பர் 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நிலக்கல் மகாதேவர் கோவிலில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவும் நடைபெறும். ஒணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்கு பின் நடை 10-ந் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை செப்டம்பர் 16-ந் தேதி திறக்கப்படும். 21-ந்தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருவதாக திருவிதாம்கூர் தேவஸ்தானம் தகவல்- மக்கள் தொடர்பு துறை அதிகாரி சுனில் அருமானூர் தெரிவித்து உள்ளார்.


Next Story