பெருமாளைப் பற்றிய சில தகவல்கள்


பெருமாளைப் பற்றிய சில தகவல்கள்
x

ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம்.

திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில், ஏழுமலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 'ஸ்ரீவாரி பாதம்' என்று அழைக்கப்படும் அந்த இடத்தில், திருமலைவாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியின் மார்பில், சிவலிங்க அடையாளம் உள்ளது.

உடுப்பியில் உள்ள கிருஷ்ணருக்கு, நவராத்திரியின் ஒன்பது நாட்களும் புடவை சாத்தி வழிபாடு செய்கிறார்கள்.

ஆந்திரா மாநிலம் பத்ராச்சலத்தில் இருக்கும் ராமர் கோவிலில் உள்ள ராமபிரான், தனது கையில் சங்கு மற்றும் சக்கரம் தாங்கி காட்சியளிக்கிறார்.

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் வானமாமலை பெருமாள் கோவில் இருக்கிறது. இங்குள்ள பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சிவபெருமானைப் போலவே மூன்று கண்களைக் கொண்ட பெருமாளை, சென்னை அருகே உள்ள சிங்கப் பெருமாள் கோவிலில் வழிபாடு செய்யலாம். இங்குள்ள மூலவரான நரசிம்மருக்கு மூன்று கண்கள் உள்ளன.

திருக்கண்ணபுரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன், பத்மாசனத்தில் அமர்ந்தபடி, கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கி காட்சியளிக்கிறார், கண்ணபுரத்தான்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சிவன் மற்றும் பெருமாள் கோவில் இது மட்டுமே.

திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் உள்ளது, வேதநாராயணன் கோவில். இங்குள்ள பெருமாள் நான்கு வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவருக்கு 'வேதநாராயணன்' என்று பெயர்.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர், அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். இவர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தருவார்.

கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தில், ரங்கநாதருக்கு குடைபிடித்தபடி இருக்கும் ஆதிசேஷனுக்கு ஏழு தலைகள் இருக்கின்றன.

திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன்கோவில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோவில்களிலும் தாயாருக்கு சன்னிதி இல்லை.

பொதுவாக பெருமாள், ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீவைகுண்டத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, நின்ற கோலத்தில் காட்சி தரு கிறார்.

காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோவிலில், பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதீகம். இங்கு திருக்கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.

மாமல்லபுரம் தல சயனப் பெருமாள் கோவிலில், பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு, சக்கரம் இல்லை.

காஞ்சி உலகளந்தபெருமாள் திருக்கோவிலில் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன.


Next Story