காரிய வெற்றி தரும் காளிகாம்பாள்


காரிய வெற்றி தரும் காளிகாம்பாள்
x

தமிழகத்தின் தலைநகரான சென்னை நகரத்திற்குள் அமைந்துள்ள புகழ்பெற்ற திருக்கோவில்களில் ஒன்று, சென்னை காளிகாம்பாள் ஆலயம். இது பாரிமுனை பகுதியில் உள்ள தம்புச் செட்டி தெருவில் இருக்கிறது.

இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் அன்னையானவள், கருணை உள்ளம் கொண்டவள். இந்த அன்னையை இஷ்ட தெய்வமாகவும், குலதெய்வமாகவும் கொண்டவர்கள் ஏராளம். இந்த அன்னை வீற்றிருக்கும் ஆலயத்தைப் பற்றி சிறுசிறு குறிப்புகளாக இங்கே பார்க்கலாம்.

* 300 ஆண்டுகள் பழமையானது, இந்த காளிகாம்பாள் கோவில்.

* இவ்வாலயத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால், பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் பூரணமாக நிறைவேறும்.

* சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பார்கள். அதுபோல் இந்த ஆலயத்திற்கு வந்து, அம்மனின் பிரசாதமான குங்குமத்தைப் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்.

இத்தல அன்னையான காளிகாம்பாள், மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன்னுடைய இரு கரங்களாக பெற்றிருப்பதாக தல வரலாறு சொல்கிறது.

* காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதையாக, கடல் கன்னி உள்ளது.

* கிழக்கு நோக்கி அமையப்பெற்ற காளிகாம்பாள் ஆலயத்தில், இத்தல அன்னை மேற்கு நோக்கி வீற்றிருந்து அருள்கிறாள்.

* இத்தல அன்னையை, தேவர்களின் தலைவனான இந்திரன், நிதிகளின் அதிபதியான குபேரன், கட்டிடக் கலையின் அரசனான விஸ்வகர்மா ஆகியோர் போற்றித் துதித்துள்ளனர்.

* பவுர்ணமி தோறும் இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், காயத்ரி தேவிக்கும் கூட்டு வழிபாடும், பூஜையும் நடைபெறும்.

* இத்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5 மணிக்கும், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கும் சிறுவர்களுக்கான நீதி போதனை மற்றும் ஆன்மிக வகுப்பு இலவசமாக நடைபெறும்.

* வெள்ளிக்கிழமை தோறும் கன்னி பூஜை, கோ பூஜை, திரு விளக்கு பூஜை நடத்தப்படுகிறது.

* சுவாசினி பூஜை சிறப்பு மிக்கது. இந்த பூஜை சுமங்கலி களுக்கு விசேஷ அருள் தருவதாகும். இதற்காகவே சென்னையில் வேறு எங்கும் இல்லாதபடி இத்தலத்தில் 'சுவாசினி சங்கம்' அமைக்கப்பட்டுள்ளது.

* இத்தலம் இரு பிரகாரங்கள் கொண்டது. உள் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகர், வீரபகாமங்கர், அவர் சீடர் சித்தையா, கமடேஸ்வரர், துர்கா, சண்டி மகேஸ்வரர், பைரவர், பிரம்மா, சூரிய-சந்திரர்கள் உள்ளனர். வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர், கொடி மரம், வடகதிர்காம முருகன், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராசர், ஸ்ரீமகாமேரு, ஸ்ரீவீரபத்திர மகா காளியம்மன், ஸ்ரீ நாகேந்திரர், ஸ்ரீவிஸ்வ பிரம்மா சன்னிதிகள் அமைந்துள்ளன.

* திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள், கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

* செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும்.

* மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும்.

* இந்த ஆலயத்திற்கு இரண்டு வாசல்கள் உள்ளன. தம்புச் செட்டி தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல், 'குண வாயில்' என்றும், அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மேற்கு கோபுர வாசல் 'குட வாயில்' என்றும் அழைக்கப்படுகிறது.


Next Story