சிவன், காமனை தகனம் செய்த திருக்குறுக்கை


சிவன், காமனை தகனம் செய்த திருக்குறுக்கை
x

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்று காமன் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் தொடங்கி வளர்பிறையில் கொண்டாடப்படும் இப்பண்டிகை சுமார் 15 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். காமனை சிவன் எரிப்பதும், பின்னர் ரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்கி அவனை உயிர்ப்பிப்பதுமான புராண வரலாறே காமன் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. காமனை எரித்ததும், சிவனின் நெற்றிக்கண் நெருப்பை வாயு பகவான் சுமந்துச் சென்று, சரவணப்பொய்கையில் விட்டு முருகப்பெருமான் பிறப்புக்கு வித்திட்டதுமான புராண வரலாறு நிகழ்ந்த திருத்தலமே, திருக்குறுக்கை திருத்தலம்.

தல வரலாறு

தீர்க்கவாகு என்ற முனிவா், சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கு கங்கை நீரை ஆகாயத்தின் வழியே பெற்று அபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒவ்வொரு ஆலயத்தின் முன்னே நின்று நீண்ட தன் இரு கரங்களை உயரே தூக்குவார். குடத்தில் கங்கை நீர் வரும். அதைக் கொண்டு அபிஷேகம் செய்வார். அதனடிப்படையில் இவ்வாலயத்திற்கு வந்த அவர், ஆலயத்தின் முன்புறமுள்ள திரிசூல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டார். சூலதீர்த்தம் கங்கையை விட புனிதமானது என்பதை அறியாது வழக்கம்போல, கங்கைநீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய முடிவுசெய்து தன் இரு கரங்களையும் ஆகாயத்தை நோக்கி தூக்கினார்.

கங்கை நீர் வருவதற்கு பதிலாக அவரது நீண்ட கைகள் குறுகிப்போயின. இதை எதிர்பாராத முனிவர் இறைவனை சரணடைந்தார். முதலில் விநாயகரை வழிபட விநாயகரும் தன் கையை குறுக்கிக் கொண்டு காட்சியருளி அவர் கவலையைப் போக்கினார். இதனால் இத்தலத்தின் பெயர் 'குறுங்கைத்தலம்' என்றானது. குறுங்கை விநாயகர், ஆலய பிரகாரத்தில் தனிச் சன்னிதியில் ஆவுடையார் மீது இருப்பதும், அவருக்கு அருகில் குறுங்கை முனிவரின் உருவம் இருப்பதும் இந்த ஆலயத்தின் சிறப்பாகும்.

புராண வரலாறு

பிரம்மனின் பேத்தியும், தட்சனின் மகளுமான தாட்சாயிணியை சிவபெருமான் மணந்தார். அது பிடிக்காத தட்சன், சிவபெருமானை அழைக்காமல் யாகம் நடத்தினான். இதனால் கோபமடைந்த தாட்சாயிணி, தட்சனின் வேள்வித்தீயில் விழுந்து உயிர் துறந்ததுடன், வேள்விக்கான பலன் கிடைக்காதபடி செய்தாள். தாட்சாயிணியின் முடிவு கேட்டு கோபம் கொண்டு சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பி தட்சனின் வேள்விச் சாலையையும், தட்சனையும் அழித்தார். பின்னர் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார் ஈசன்.

இந்த நிலையில் சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற சூரபதுமன் மற்றும் தாரகாசுரன் ஆகியோர், தேவர்களை துன்புறுத்தி வந்தனர். அசுரா்களால் பாதிக்கப்பட்ட தேவர்கள், அவர்களை அழிக்க ஒரு குமாரனைத் தோன்றச் செய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டுகோள் வைப்பதென முடிவு செய்தனர். ஆனால் அவர் யோக நிலையில் இருந்ததால், பல முயற்சிகளை செய்தும், தவத்தை கலைக்க இயலவில்லை. இறுதியாக காமக் கடவுளான மன்மதன் மூலம், சிவன் மீது அம்பு விடச் செய்து அவரது தவத்தைக் கலைத்தனர்.

இதனால் கோபமுற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணைத் திறந்து காமனைப் பார்க்க அவன் எரிந்து சாம்பலானான். இதுவே 'காம தகனம்' எனப்படுகிறது. மன்மதனின் மனைவியான ரதிதேவி, தன் கணவனை உயிர்ப்பித்து தரும்படி சிவபெருமானிடம் வேண்டினாள். சிவபெருமான் அவளிடம், "நான் பூலோகத்தில் பார்வதியை மணம் புரியும்போது, மன்மதனுக்கு சாப விமோசனம் கிடைக்கும். அதுவரை அவன் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான்" என்று அருளினார்.

காமன் தகனத்தின் போது சிவனின் கண்களிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியை வாயு பகவான் சுமந்துச் சென்று சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளில் விழச்செய்தார். இது ஆறு குழந்தைகளாக உருப்பெற, கார்த்திகைப் பெண்கள் அறுவர், அந்தக் குழந்தைகளை வளர்த்தனர். பார்வதிதேவி ஆறு குழந்தைகளையும் தனது இரு கரத்தால் ஒன் றாக அணைக்க, அந்த ஆறுபேரும் ஒருவராக மாறினர். இப்படி காமனை தகனம் செய்து ஆறுமுகனை உருவாக்கி, அசுரனை அழிக்க சிவன் அருள் புரிந்த திருத்தலமே திருக்குறுக்கை திருத்தலம்.

ஆலய அமைப்பு

ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்துக்கு முன்னதாக தல தீர்த்தமான சூலகங்கை உள்ளது. வாசலில் உள்புறமாகத் துவார கணபதியும், சுப்பிரமணியரும் இருக்கின்றனர். வெளிச்சுற்றில் தோட்டம் மட்டுமே உள்ளது. சன்னிதிகள் எதுவும் கிடையாது. இவ்வாலயத்தில் கொடிமரம் இல்லை. நந்தி, பலிபீடம் மட்டும் உள்ளது. பஞ்சமூர்த்தி மண்டபத்தின் இடதுபக்கம் உள்ள சன்னிதியில், ஞானாம்பிகை அம்மன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார். அம்மன் சன்னிதிக்கு எதிரில், நந்தி, பலிபீடம், இருபுறமும் துவாரபாலகியர் உள்ளனர். அம்பாள் சன்னிதியின் வலதுபுறம் சுக்ர வார அம்மனைக் காணலாம்.

உள் கோபுரம் தாண்டி உள்ளே செல்ல நடராஜர் மண்டபம் உள்ளது. இதன் வடக்குப்புறத்தில் முருகப்பெருமான், கஜலட்சுமி சன்னிதிகளும், தெற்கில் சோஹரேசுவரர், சோமாஸ்கந்தர், நிருதிகணபதி சன்னிதிகளும் உள்ளன. அடுத்துள்ள சம்ஹார மண்டபத்தில் சிவபெருமான், யோகமூர்த்தியாக வீற்றிருக்கிறார். சிவபெருமானைச் சுற்றி சனகாதி முனிவர்கள் உள்ளனர். மகாமண்டபத்தில் பலிபீடமும் நந்தியம் பெருமானும் இடம்பெற்றிருக்க, கருவறையில் மூலவர் வீரட்டேசுவரர் சதுரமான ஆவுடையார் மீது லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். லிங்கத்தை உற்றுப் பார்த்தால் சிவபெருமான் மீது மன்மதன் எய்த தாமரை மலர் பீடத்தின் முன்புறம் நடுவில் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். மூலவர் வீரட்டேசுவரரை வணங்குபவர்களுக்கு துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். சுவாமி சன்னிதிக்கு நேர் எதிரில் ரதி-மன்மதன் சிற்பங்கள் இருக்கின்றன.

திருச்சுற்றில் கிணறு, தலவிருட்சமான கடுக்காய் மரம், செவிசாய்த்த நந்தி, நவக்கிரகங்கள், சூரியர், பைரவர், மடப்பள்ளி குறுங்கை விநாயகர் சன்னிதி, அதற்கடுத்து ஞானசம்பந்தர், சேரமான், சந்திரசேகரர், பிரதோஷ நாயனார் ஆகியோர் உள்ளனர். கருவறை கோட்டத்தில் துர்க்கை, பிரம்மா, பைரவர், அண்ணாமலையார், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, மகாகணபதி வீற்றிருக்கின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

இவ்வாலயம் அமைந்துள்ள திருக்குறுக்கை செல்வதற்கு மயிலாடுதுறையிலிருந்து நேரடி பேருந்து மற்றும் ஆட்டோ வசதி இருக்கிறது. மணல்மேடு மற்றும் குத்தாலத்தில் இருந்தும் ஆட்டோ வசதி உள்ளது. அருகாமையில் உள்ள ரெயில் நிலையம் மயிலாடுதுறை.

- நெய்வாசல் நெடுஞ்செழியன்.


Next Story