அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்


அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
x

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் அமைந்த மலைக்கு `நாகமலை' என்ற பெயரும் உண்டு. ஆதிசேஷனே மலை உருவில் இங்கு தவம் செய்வதோடு, அர்த்தநாரீஸ்வரரையும் தன் தலைமீது சுமந் திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதனால்தான் இந்த மலைக்கு `சர்ப்ப சைலம்', `அரவகிரி' என்ற புராணப் பெயர் இருந்துள்ளது. முன்பு வாகன வசதியில்லாத காலத்தில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திற்கு படிக்கட்டின் மூலமாகத்தான் சென்றார்கள். அப்படி செல்லும்போது பிரம்மாண்டமான மலைப்பாறையில் செதுக்கப்பட்ட அறுபது அடி நீளமுள்ள நாகர் சிலையை கண்டு வழிபட்ட பிறகே அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லமுடியும். தற்போது வாகனங்கள் செல்லும் வகையில் பாதைகள் அமைந்துவிட்டதால் இந்த பாதையை ஒருசிலர்தான் பயன்படுத்துகிறார்கள் அதுமட்டுமில்லாமல் குடியிருப்புகளும் இந்த பாதையை ஒட்டி ஆக்கிரமித்துள்ளதால் இந்த நாகர் சிலை பலரின் கண்களில் படுவதில்லை.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க மலைக்கு செல்ல நாகர் பள்ளம் என்ற இடத்தில்தான் படிகள் ஆரம்பிக்கின்றது. இந்த நாகர் பள்ளத்தில் அறுபதடி நீளமுள்ள நாகர் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. நாகர் சிலையின் படத்தின் நடுவே சிவ லிங்கம் ஒன்று உள்ளது. பெரிய பாம்பை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பாம்புகள் பின்னிப்பிணைந்தபடியும், தனித்தும் காணப்படுகிறது.

நாக தோஷத்திற்கு பரிகாரத்தலமாக இந்த நாகர் பள்ளம் விளங்குகின்றது. ராகு, கேது தோஷம் நீங்க இச்சிலைக்கு பால் ஊற்றி, மஞ்சள், குங்குமம் சார்த்தி வழிபடுகின்றனர். நாட்பட்ட திருமணம் நடக்க தாலிச்சரடும், குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டியும் வழிபாடு நடக்கிறது.

நாகர் சிலையையொட்டி இருக்கும் அறுபது படிகளுக்கு `சத்திய படிகள்' என்று பெயர். இந்த படிகளில் நின்றுகொண்டு பொய்சத்தியம் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடுமாம். சாட்சிகள் இல்லாத வழக்குகள், சொத்து தகராறுகள், கணவன்-மனைவி பிரச் சினைகள் இந்த படிக்கட்டுகளில் அமர்ந்து பஞ்சாயத்து செய்யப்படுமாம். பொய்சாட்சி சொன்னாலோ, கொடுத்த வாக்கை மீறினாலோ மரணம்கூட தண்டனையாய் கிடைக்குமாம்.

நாக பஞ்சமி இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இங்கிருக்கும் நாகர்களுக்கு பொங்கலிட்டு, கோழி, ஆடு காணிக்கைகளையும் செலுத்துகிறார்கள்.

திருச்செங்கோட்டிற்கு சேலம், பெருந்துறை, நாமக்கல்லில் இருந்து பேருந்து வசதி உண்டு.


Next Story