புரட்டாசி சனிக்கிழமை: நவதிருப்பதி கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்


புரட்டாசி சனிக்கிழமை:  நவதிருப்பதி கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
x

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நவதிருப்பதி கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

தூத்துக்குடி:

புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகும். இந்த தினத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தூத்துக்குடி மாவட்டத்தில் தென்திருப்பேரை சுற்றவட்டாரப்பகுதியைச் சுற்றி நவத்திருப்பதி கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்கள் 108 வைணவ திவ்ய தேசங்களிலும் ஒன்றாகும்.

அதன்படி ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசன பெருமாள், திருப்புளியங்குடி காய்சினி வேந்த பெருமாள், இரட்டை திருப்பதி தேவர்பிரான், அரவிந்த லோசனர், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், தென்திருபேரை மகரநெடுங்குழைக்காதர், திருக்கோளுர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் ஆகிய நவத்திருப்பதி கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையான இன்று காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5.30 மணிக்கு திருமஞ்சனம், 6 மணிக்கு நித்திய தீபாராதனை நடந்தது.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பல்வேறு வாகனங்களில் வரும் பக்தர்கள் குடும்பத்துடன் நெய் விளக்கு ஏற்றி வழிப்பட்டனர். திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் அன்னதான குழு சார்பாக பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது.

பக்தர்களின் வசதிக்காக திருநெல்வேலியிலிருந்து நவத்திருப்பதி கோவில்களுக்கு சிறப்பு அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொது தரிசனம் மற்றும் பத்து ரூபாய் சிறப்பு கட்டண தரிசனத்தில் பக்தர்கள் வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story