மூன்று வகை செல்வங்கள்

இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் செல்வங்கள் மூன்று விதமான வழிகளில் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. அந்த செல்வங்களை லட்சுமி செல்வம், குபேர செல்வம், இந்திர செல்வம் என்று பிரிக்கிறார்கள். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.
லட்சுமி செல்வம்
அமிர்தம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது அமிர்தத்திற்கு முன்பாக கடலுக்குள் இருந்து சில தெய்வங்களும், தெய்வீகப் பொருட்களும் வெளிப்பட்டன. அப்படி பாற்கடலில் இருந்து வெளிப்பட்டவளே லட்சுமிதேவி. இவளே ெசல்வத்திற்கு அதிபதியாக இருக்கிறாள். இந்த தேவியே, இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்குக் கொடுத்தாள். குபேரனை அழகாபுரிக்கு அதிபதியாக ஆக்கினாள். கிருஷ்ணனின் நண்பனான குசேலனுக்கு அளவற்ற நிதியைக் கொடுத்தாள்.
இந்த லட்சுமியின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். மகாலட்சுமியின் அருளைப் பெற்றவர்களுக்கு 16 வகையான பேறுகளும் வந்துசேரும். லட்சுமி செல்வத்தைப் பெற்றவர்களுக்கு மதி மயக்கம் தோன்றாது. இந்தச் செல்வத்தைப் பெற்றவர்கள் மற்ற மனிதர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். தர்ம வாழ்வை மேற்கொள்வார்கள். இந்த செல்வம் ஏழு தலைமுறையையும் தாண்டி நிலைத்து நிற்கும்.
மகாலட்சுமி அளித்த செல்வம் வளர்பிறை சந்திரனைப் போன்று ஓங்கி வளரும். இயல்பிலேயே கொடை உள்ளம் கொண்டவர்களின் மீதுதான் லட்சுமியின் கடைக்கண் பார்வை படும்.
குபேர செல்வம்
விஸ்ரவன் என்ற ரிஷிக்கும், இலவிததேவி என்ற அசுரகுல பெண்ணுக்கும் பிறந்தவர், குபேரன். இவர் ராவணனின் சகோதரா் ஆவார். குபேரனிடம் இருந்த நகரத்தை, ராவணன் கைப்பற்றிக் கொண்டான். இதனால் லட்சுமியின் அருளால் தனி நகரத்தை ஏற்படுத்திக் கொண்டார். இவரது தவத்தின் காரணமாக, அவருக்கு சங்கநிதி, பதுமநிதி உள்ளிட்ட நவ நிதிகள் கிடைத்து, அதற்கு அதிபதியானார். குபேரனை மனமுருகி வணங்கினால், அவர் வழங்கும் செல்வம் நமக்குக் கிடைக்கும்.
மகாலட்சுமி வழங்கும் செல்வத்தைப் போன்று, நிதானமாக வந்து நிரந்தரமாகும் செல்வமல்ல இது. திடீர் அதிர்ஷ்டத்தால் கிடைப்பவை. அது எப்படி வந்ததோ, அப்படியே சென்றுவிடவும் வாய்ப்புண்டு. எனவே இத்தகைய செல்வத்தை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு மரம் நடுதல், அன்னதானம், படிக்கும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்குதல், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற பொதுக் காரியங்களுக்குச் செலவழிக்க வேண்டும். இதன் மூலம் மூன்று தலைமுறைகள் வரையிலாவது அந்த செல்வம் கீழிறங்காமல் நிலைத்திருக்கும்.
இந்திர செல்வம்
பொங்கலுக்கு முன்தினம் கொண்டாடப்படும், போகி பண்டிகை இந்திரனை பிரதானமாக வைத்தே கொண்டாடப்படுகிறது. கிழக்கு திசையின் அதிபதியாக இருப்பவர் இந்திரன், தேவர்களின் தலைவனாகவும் அவரே இருக்கிறார். பசு, வீடு, அரச போகம் மற்றும் பொன், பொருள் சேர்க்கை போன்றவை இந்திர சம்பத்தின் அடையாளங்கள். இந்திரனை வழிபடுபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவே.
இந்திரன் அருளால் அடையும் செல்வம் மூன்று தலைமுறைகள் வரை வருவது அரிதிலும் அரிது. சிலருக்கு ஒரே தலைமுறையில் கூட மறைந்துவிடும். இந்திரலோகத்திற்கு 'சொர்க்கபுரி' என்ற பெயரும் உண்டு. அங்கு பொன் பொருள் நிறைந்திருக்கும் அளவுக்கு, கேளிக்கைகளும் இடம்பெற்றிருக்கும். கேளிக்கை நிறைந்திருக்கும் இடத்தில் உள்ள செல்வம் வளர்ச்சியை எட்ட வாய்ப்பில்லை. அது குறைந்து செல்லவே வாய்ப்புண்டு. அந்த வகையில் இந்திரனால் அருளப்பட்ட செல்வம் ஒருவருக்கு கிடைத்தாலும் அது நிரந்தரமற்றது. இந்தச் செல்வம் ஒரு தலைமுறை அளவுக்காவது நிலைக்க விரும்புபவர்கள், கிரிவலம் வருதல், குல தெய்வத்தைப் பூஜித்தல் போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் நலம் விளையும்.