நம்பிக்கை அளிக்கும் ‘அனைவருக்கும் வீடு’ திட்டம்


நம்பிக்கை  அளிக்கும்  ‘அனைவருக்கும்  வீடு’  திட்டம்
x
தினத்தந்தி 5 May 2017 9:30 PM GMT (Updated: 5 May 2017 10:36 AM GMT)

வாழ்க்கையின் அடிப்படை தேவைகளாக உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்று அம்சங்கள்தான் என்பது உலகம் எங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கருத்தாக உள்ளது.

வாழ்க்கையின் அடிப்படை தேவைகளாக உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்று அம்சங்கள்தான் என்பது உலகம் எங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கருத்தாக உள்ளது. அடிப்படையானதாகவும், அவசியமானதாகவும் உள்ள அந்த மூன்று தேவைகளும் அனைவருக்கும் சாத்தியமாகி இருக்கிறதா..? என்ற கேள்விக்கு இன்றைய நாகரிக சூழலில்  சரியான பதில் பதில் சொல்வது சிரமம். அதுவும் இந்தியா போன்ற பல்வேறு கலாசாரங்களும், 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையும் கொண்ட நிலையில் உறைவிடம் என்ற வீடு அனைவருக்கும் சொந்தம் என்பது மறுக்க இயலாதது.

நான்கு பிரிவுகள்

பொருளாதார அடிப்படையில் மக்கள் அனைவரும் நான்கு வித பிரிவுகளுக்குள் வருகிறார்கள். அதாவது, பொருளாதார நிலையில் பின் தங்கியயோர், குறைந்த வருவாய் பெறுவோர், மத்திய தர வருவாய் பெறுவோர் மற்றும் உயர் தர வருவாய் பெறுவோர் என்பவைதான் அவை. அந்த பட்டியலில் பொருளாதார ரீதியாக பின் தங்கியோர் சுமார் 56 சதவிகிதமாகவும், குறைந்த வருவாய் பெறுவோர் சுமார் 39.4 சதவிகிதமாகவும், உயர் வருவாய் பெறுவோர் 4.38 சதவிகிதமாகவும் உள்ளதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மக்கள் தொகை

மேலும், கடந்த பத்தாண்டுகளில் மக்கள் தொகை அதிகரிப்பானது வழக்கமான சதவிகித அளவை விடவும் குறிப்பிடத்தக்க விதத்தில் உயர்ந்துள்ளது. ஆனால், அந்த அளவுக்கு உள் கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்புகள் அல்லது வீடுகள் அதிகரிக்கவில்லை என்ற நிலையில் பிரதமரின், 2022–க்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டம் மத்திய தர மக்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் பயனாளிகளுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2.40 லட்சம் வரை மத்திய அரசின் உதவி தொகை கீழ்கண்ட அடிப்படையில் வழங்கப்படுகிறது.

குடிசை பகுதி மறு சீரமைப்பு

இந்த திட்டத்தின் கீழ் அதே இடத்தில் நிலத்தை ஆதாரமாக கொண்டு வீடுகள் கட்டப்படும். இதில் குடிசைப்பகுதியில் உள்ளவர்கள் அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை கொண்ட பல அடுக்கு கட்டிடங்களில் சிமெண்டு வீடுகளை இலவசமாக பெற முடியும். இந்த பிரிவில் ரூ.1 லட்சம் மத்திய அரசின் உதவி தொகையாக வழங்கப்படும்.

கடன் உதவிகள்

பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவை சார்ந்தவர்களுக்கு ரூ.1,50,000 மத்திய அரசின் உதவி தொகையாக வழங்கப்படும். ஒவ்வொரு திட்டத்திலும் 35 சதவீதம், குறைந்தபட்சம் 250 வீடுகள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு என்று ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், அவர்களே புதிய வீட்டை கட்டவும், ஏற்கனவே உள்ள வீட்டை புதுப்பிக்கவும், புதிய அறைகள், சமையல் அறை, கழிவறை ஆகியவற்றை அமைக்கவும் மத்திய அரசின் உதவி தொகை, வீட்டு கடனின் வட்டி தொகை மானியமாக கொடுக்கப்படும்.

மானிய விவரம்

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்கள் மற்றும் குறைந்த வருவாய் கொண்டவர்கள் ரூ.6 லட்சம் மதிப்பில் 20 ஆண்டு கால வீட்டு கடனுக்கு 6.50 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். ரூ.6 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் கொண்ட மத்திய தர வருமான பிரிவினருக்கு ரூ. 9 லட்சம் மதிப்பிலான 20 ஆண்டு கால வீட்டு கடனிற்கு 4 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.

மேலும், ரூ. 12 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் கொண்ட பிரிவினருக்கு ரூ. 9 லட்சம் மதிப்பில் 20 ஆண்டு கால வீட்டு கடனுக்கு 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். ரூ.2,30,000 முதல் ரூ.2,40,000 வரை இந்த மானியம் பயனாளிகளின் மாதாந்திர தவணை சுமையை குறைக்க முன்பணமாக கொடுக்கப்படும்.

குடும்ப அங்கத்தினர்கள்

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர்களுக்கு கட்டப்படும் வீடுகள், குடும்பத்தில் வயது வந்த பெண் உறுப்பினர் பெயரிலோ அல்லது குடும்பத்தில் வயது வந்த பெண் மற்றும் ஆண் உறுப்பினர் பெயரில் இணைந்தோ இருக்க வேண்டும்.

கடன் இணைக்கப்பட்ட மானிய திட்டத்தின் கீழ் மத்திய தர வருமான பிரிவினருக்கு கட்டப்படும் வீடுகள், குடும்பத்தில் வயது வந்த வருவாய் ஈட்டும் உறுப்பினர் பெயரில் இருக்க வேண்டும். அவர் திருமணம் ஆகாதவராகவும் இருக்கலாம். மேலும், குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டம், ‘ஸ்மார்ட் நகரங்கள்’ இயக்கத்தின் கீழும் ஊக்குவிக்கப்படுகிறது. இதற்கான சில திட்டங்களும் முன்மொழியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Next Story