வங்கிகள்–நிதி நிறுவனங்கள் அளிக்கும் அடமான கடன்


வங்கிகள்–நிதி  நிறுவனங்கள்  அளிக்கும்  அடமான  கடன்
x
தினத்தந்தி 1 Dec 2017 10:30 PM GMT (Updated: 1 Dec 2017 1:18 PM GMT)

ஒருவரது அவசர நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் கடன் வகைகளில் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது அடமானக்கடன் ஆகும்.

ருவரது அவசர நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் கடன் வகைகளில் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது அடமானக்கடன் ஆகும். ஒருவரது அவசியமான தேவைகளை பூர்த்தி செய்யவும், பொருளாதார சரிவுகளில் இருந்து மீளவும் வங்கி கடன்கள் உதவுகின்றன. அந்த வரிசையில் உள்ள சொத்து அடமானக் கடன் என்பது வீட்டு கடன் பெறுவது போல என்று குறிப்பிடலாம்.

பல்வேறு கடன்கள்

பிள்ளைகள் உயர்கல்வி பயில, திருமணம் செய்ய, வீட்டை புதுப்பிக்க, மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள, தொழிலை விரிவாக்கம் செய்ய மற்றும் புதிய ரக வாகனம் வாங்க என்று பல்வேறு தேவைகளுக்கு வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்று கொள்வது வழக்கத்தில் உள்ளது.

யாவரும் பெறலாம்

வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு, வர்த்தக கட்டிடங்களுக்கான கிரய பத்திரங்களை அடமானமாக வைத்து இக்கடனை பெறலாம். மாதாந்திர சம்பளம் பெறுபவர்கள், சுயமாக தொழில் செய்பவர்கள் என்று அனைவருக்கும் இக்கடன் கிடைக்கும்.

உள்ளாட்சி அங்கீகாரம்

குறிப்பாக, அடமானம் வைக்கப்படும் சொத்து, அது அமைந்துள்ள பகுதியின் உள்ளாட்சி அமைப்பின் அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும். மேலும், சொத்து மதிப்பு முழுமைக்கும் கடன் தரப்படுவதில்லை என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். வழக்கமாக, சொத்தின் ஒட்டுமொத்த மதிப்பில் 50 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரையில்தான் கடன் கிடைக்கும்.

கடன் தொகை

சொத்து அடமானக் கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம், பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொண்டே இக்கடனை வழங்குகின்றன. அதாவது கடன் கேட்பவரது மாத வருமானம், கடனை திரும்ப செலுத்தும் திறன், சொத்துக்களின் மதிப்பு ஆகியவை கடன் தொகையை நிர்ணயிக்கும் காரணிகளாக அமைகின்றன. சொத்து அடமான கடனை அதிகபட்சமாக 15 ஆண்டுகளில் திரும்ப செலுத்தலாம். இந்தக் காலம் சம்பந்தப்பட்ட வங்கிக்கு ஏற்ப மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

பூர்வீக வீடு

மேலும், ஒருவரது பூர்வீக சொத்தை அடமானமாக வைத்தும் கடன் பெற முடியும். அவ்வாறு கடன் கேட்கும்போது சம்பந்தப்பட்ட சொத்தில் இருக்கும் உரிமைக்கான ஆதாரங்களை அளிக்க வேண்டியது அவசியம். மேலும், சொத்து பிரிக்கப்படவில்லை என்றால், இதர சட்டப்படியான வாரிசுகளும் சேர்ந்து கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டியதாக இருக்கும்.

Next Story