திசைகளுக்கு ஏற்ப கட்டிட சுவர் அமைப்பு


திசைகளுக்கு ஏற்ப கட்டிட சுவர் அமைப்பு
x
தினத்தந்தி 20 Jan 2018 5:16 AM GMT (Updated: 20 Jan 2018 5:16 AM GMT)

பொதுவாக அனைத்து வகை கட்டிடங்களிலும் திசைகாட்டி குறிப்பிடும் திசையமைப்புக்கு இணையாக சுவர்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது வாஸ்து விதியாகும்.

 உலக அளவில் புகழ் பெற்ற கட்டிடங்கள் வட மற்றும் தென் துருவங்களின் மையப்புள்ளியை இணைக்கும் நேர்கோட்டிற்கு இணையாக உள்ளதுபோல வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உதாரணமாக நமது நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல கட்டிடங்களை சொல்லலாம்.

காந்த புலம்

பூமியில் செயல்படும் காந்தப்புலத்தை அடிப்படையாக கொண்டு நான்கு முக்கிய திசைகள் மற்றும் அவை இணையும் நான்கு கோண திசைகள் ஆகிய எட்டு திசையமைப்புகள் இருக்கின்றன. கட்டிட வடிவமைப்பில் அவற்றின் பங்கு பற்றி வாஸ்து நிபுணர்கள் கூறும் தகவல்களை இங்கே காணலாம்.

கிழக்கு திசை

பூமி மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசை நோக்கி தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது. அதனால் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதுபோல தோன்றுகிறது. சூரிய உதயம் முதலாக அனைத்துவிதமான உலக இயக்கங்களும் தொடங்குவதால், நமது கவனம் இயல்பாகவே கிழக்கை நோக்கி ஈர்க்கப்படுகிறது. குறிப்பாக, இருள் விலகி ஒளி பரவும் திசையாக இருப்பதால் கிழக்கு திசை அறிவுக்கு உறுதுணை செய்வதாகவும் கருதப்படுகிறது. அதன் காரணமாக கிழக்கில் தலை வாசல், இதர அறைகளுக்கான நுழைவாசல் மற்றும் பெரிய அளவில் ஜன்னல்கள் ஆகியவற்றை அமைப்பது பிரதானமாக உள்ளது.

வடக்கு திசை

வடக்கு திசை குபேரனுக்கு உரியதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. பூமி தனது அச்சிலிருந்து வடக்காக 23.5 டிகிரி கோணத்தில் சாய்ந்த நிலையில் தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது. அதன் காரணமாக ஏற்படும் சக்தி அலைகள் வடக்கு திசை நோக்கி இயல்பாக செல்கின்றன. அதனால் ஏற்படும் ஈர்ப்பு விசை காரணமாக உலக இயக்கங்கள் யாவும் வடக்கு திசை சார்ந்து இயல்பாக இயக்கம் பெறுகின்றன. அதனால், தலைவாசல், பால்கனி போன்றவற்றை அமைப்பதில் இத்திசை முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும், மனிதனுடைய தலைப்பகுதி வட துருவமாக இயங்கும் தன்மை பெற்றது. ஒத்த துருவங்கள் விலகக்கூடிய தன்மை பெற்றவை என்ற அடிப்படையில் வடக்கு நோக்கி தலை வைத்து உறங்குவது தவிர்க்கப்படுகிறது. அதாவது, உறங்கும்போது மூளையின் செயல்திறன் இயல்பாக அமைய வடக்கு திசை சாதகமாக இருப்பதில்லை.

சாலை அமைப்பு முக்கியம்

திசைகாட்டிக்கு இணையாக வீடுகளின் சுவர்கள் இருக்கவேண்டும் என்ற வாஸ்து விதிக்கு ஏற்ப பல மனைகள் அல்லது இடங்கள் இருப்பதில்லை. அத்தகைய இடங்களில் சாலை அமைப்புக்கு ஏற்ப கட்டிடங்களின் சுவர்களை அமைப்பதே சிறந்தது என்று வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது வெளிப்புற சாலைகளுக்கு இணையாக வீடுகளின் சுவர்கள் அமைய வேண்டும்.

Next Story