நிலத்தடி நீரை கண்டறியும் நவீன தொழில்நுட்பம்


நிலத்தடி நீரை கண்டறியும் நவீன தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 13 April 2018 11:00 PM GMT (Updated: 13 April 2018 10:23 AM GMT)

பாரம்பரிய முறையில் நிலத்தடி நீரோட்டம் பற்றி கண்டறிந்து சொல்பவர்கள் குறைந்து விட்ட நிலையில், அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

 நிலவியல் வல்லுனர்கள் பல்வேறு வகையான கணினி தொழில் நுட்பங்களைக் கொண்டு ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். நிலத்தடி நீரின் தரம் மற்றும் அளவுகள் பொதுவாக சில மாதங்கள் அல்லது ஆண்டிற்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது.  

நிலத்தடி நீரின் தரம்

பொதுவாக, ஆழ்குழாய் கிணறு அமைக்கும்போது சுற்றுப்புறச் சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும். கிடைக்கும் நீரின் தரத்தை தனியாக பரிசோதிப்பதோடு, பக்கத்து மனைகளில் ஆழ்குழாய் கிணறுகள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும். ரசாயன தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் கிடைக்கும் நிலத்தடி நீரின் தரத்தை ஆய்வு செய்யாமல் பயன்படுத்துவது கூடாது என்றும் புவியியல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆழ்குழாய் கிணறு அமைப்பு தோல்வி அடைவது, போதிய நீர் கிடைக்காமல் இருப்பது ஆகியவற்றிற்கான காரணங்கள் பற்றி நிபுணர்கள் தெரிவிப்பதாவது :

*அன்று முதல் இன்று வரை நிலத்தடி நீரோட்டத்தை கண்டறிய பயன்படுத்திய முறைகள் அனைத்தும் பூமியின் காந்த அலைகளை மையமாகக் கொண்டுள்ளது. தண்ணீருக்கான காந்த அலைகளை (ணிவிஸி) மையமாக கொண்டு, குழாய் கிணறு அமைக்கவேண்டும்.

*நிலத்தடி நீர்மட்டம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் சரியான மையப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமையாமல், அதன் ஓரத்தில் அமைக்கப்படுவது.

*ஆழ்துளை கிணறு அமைக்கும் பொழுது இயந்திரத்தின் துளையிடும் கருவி கீழ் நோக்கி நேர்கோட்டில் இறங்காமல் பாறைகளின் உறுதிக்கேற்ப சாய்வான முறையில் துளை அமைவது.

*ஒரே அளவிலான மட்டத்தில் அமைந்துள்ள நிலத்தடி நீர் அருகில் உள்ள மற்ற ஆழ்துளை கிணறுகளால் உறிஞ்சப்படுவது.

நிலத்தடி நீரோட்டத்தை கச்சிதமாக கண்டறிய ‘டிவைனர்’ என்ற எலக்ட்ரானிக் மீட்டர் என்ற கருவியை பயன்படுத்துவது நல்ல விளைவுகளை அளிக்கிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில், பொதுப்பணித் துறையின் நிலத்தடி நீர் பிரிவில் விண்ணப்பித்து வல்லுனர்களின் உதவியை எளிமையான பட்ஜெட்டில் பெறலாம் என்பது கவனிக்கத்தக்கது.

மனை உரிமையாளர் அனுப்பிய விண்ணப்பத்தின் அடிப்படையில் நீர் வளத்துறையின் களப்பணியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் நேரில் வந்து சம்பந்தப்பட்ட மனை அமைந்துள்ள பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வார்கள். சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய காலக்கட்டத்தில் திடக்கழிவு, திரவ கழிவு, நஞ்சு கழிவு அகற்றல் உள்ளிட்ட பல செயல்களை தடுப்பதன் மூலமே உபயோகத்திற்கான சுத்தமான நிலத்தடி நீர் கிடைக்கும் என்று சூழலியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

‘ரெஸிஸ்டிவிடி மீட்டர்’

நிலத்தடி நீர் ஆய்விற்கு ‘ரெஸிஸ்டிவிடி மீட்டர்’ என்ற கருவியும் உபயோகப்படுத்தப்படுகிறது. பூமியில் ஒரு நேர்கோட்டில் நான்கு கடப்பாறைகள் குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கப்பட்டு, ஒயர்கள் மூலம் ‘ரெஸிஸ்டிவிடி’ மீட்டருடன் இணைக்கப்படுகின்றன. சி–1, சி–2 எனக் குறிப்பிட்டுள்ள இரண்டு ’எலக்ட்ரோடுகள்’ மூலம் குறிப்பிட்ட அளவு மின்சாரம் பூமிக்குள் செலுத்தப்படுகிறது. அவ்வாறு செலுத்தப்படும் மின்சாரம் மின் அலைகளாக பாறைகளின் வழியாக, பாறையின் தன்மை, அதன் அமைப்பு, பாறைகளிலுள்ள பிளவுகள் இவற்றின் தன்மைக்கேற்ப பாய்ந்து மின் எதிர்ப்பு ஏற்படுத்துகிறது.

இவ்வாறு ஏற்படும் மாறுதல் பாறைக்குள் அடிக்கப்பட்டுள்ள பி–1, பி–2 என்ற எலக்ரோடுகள் மூலம் ரெஸிஸ்டிவிடி மீட்டரில் அளவிடப்படுகிறது. அந்த எலட்ரோடுகளுக்கு இடைப்பட்ட தூரம் எவ்வளவோ அந்த அளவு ஆழத்தில் உள்ள படிவங்கள், பாறைகளின் மின் எதிர்ப்பு சக்தி ஆகியவை கணக்கிடப்படுகிறது. இந்த இடைவெளி தூரம் 2 மீட்டர் முதல் 50 மீட்டர் வரை வேறுபடும்.

இந்த நவீன முறையைப் பயன்படுத்துவதன் மூலம், நிலத்திற்கு அடியில் உள்ள படிவப் பாறை, கடினப் பாறை, மணல் பகுதி ஆகியவற்றை அறிய முடியும். மேலும் நிலத்திற்கடியில் எத்தனை அடி ஆழத்தில் நீர் கிடைக்கும் என்பதையும் நீரின் தன்மையையும் ஓரளவு கணிக்க இயலும். இதன் மூலம்,

*    நிலத்தடி நீர் உள்ள ஆழம், அடர்த்தி, அளவு மற்றும் வெளியேற்றும் திறன் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

*    நிலத்தடி நீர் செறிந்துள்ள இடத்தை முப்பரிமாண படமாக பார்க்க இயலும்.

*    அதிக பட்சம் 1500 அடி ஆழம் வரை உள்ள நீரின் தன்மை பற்றி அறிந்து கொள்ளலாம்.

*    2 ஏக்கர் அளவில் சர்வே எடுத்து, ஒவ்வொரு சதுர மீட்டரிலும் உள்ள நீரின் தன்மையை அறிந்து கொள்ளலாம்.

Next Story