குடியிருப்புகளுக்கு அவசியமான தீ தடுப்பு நடவடிக்கைகள்


குடியிருப்புகளுக்கு அவசியமான தீ தடுப்பு நடவடிக்கைகள்
x
தினத்தந்தி 13 May 2018 5:39 AM GMT (Updated: 13 May 2018 5:39 AM GMT)

கால மாற்றங்கள் காரணமாக தனி வீடுகள் மறைந்து, அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகிவிட்ட நிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

தனி வீடுகளைவிட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீத்தடுப்புச் சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை கூடுதல் கவனத்தோடு அமைக்கவேண்டும்.

வெப்பம், எரிபொருள் மற்றும் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் ஆகிய மூன்று காரணங்களில், ஒன்று தடுக்கப்பட்டாலும் நெருப்பு பரவாமல் அணைந்து விடும் என்ற அடிப்படையில் தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மேற்கொள்ளப்படவேண்டிய தீ சம்பந்தப்பட்ட எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தீயணைப்பு வல்லுனர்கள் மற்றும் கட்டுமான வல்லுனர்கள் அளிக்கும் குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

* கட்டுமான நிலையிலேயே நெருப்பை தடுக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்தது. அதாவது, பிரீ-பேப்ரிகேட்டடு அமைப்பு போன்ற ‘பயர் புரூப்’ முறைகளை கட்டுமானங்களில் பயன்படுத்தினால், வெப்பம் காரணமாக சுவர்களில் ஏற்படும் வெடிப்புகள், விரிசல்கள் போன்றவற்றை தவிர்க்கலாம். ப்ரீ-பேப்ரிகேட்டடு கட்டுமானங்கள் தீயினால் பாதிக்கப்படாத தன்மை கொண்டவை.

* ‘பயர் புரூப்’ கதவுகள், ஜன்னல்கள் போன்ற தீ தடுப்பு பொருட்களால் அமைக்கும் பட்சத்தில் தீ அதிகமாக பரவாது. பி.வி.சி கதவுகள் வெப்பத்தைப் பரப்புவதில்லை.

* சமையலறையில் குறைந்தபட்சம் ஜன்னல் அல்லது ‘எக்ஸாஸ்ட்’ மின்விசிறி இருக்க வேண்டும். உயிருக்கு பாதிப்பை உண்டாக்கும் ‘கார்பன் மோனாக்ஸைடு’ வாயுவை உணர்ந்து, ஒலி எழுப்பும் எச்சரிக்கை சாதனங்களை வீட்டில் பொருத்திவிட்டால் பெரும் பாதிப்புகளை தவிர்க்க இயலும்.

* வெல்டிங் உள்ளிட்ட மற்ற நெருப்பு சம்பந்தமான பணிகளை கட்டமைப்புகளில் மேற்கொள்ளும்போது தக்க அணைப்பான்கள் அருகில் இருக்கவேண்டும்.

* வீடு அல்லது குடியிருப்புகளுக்கு மிக அருகில் அமைந்துள்ள, நெருப்பை அன்றாடம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் இருந்தால், கூடுதல் தீ தடுப்பு முறைகளை அமைத்துக்கொள்வது பாதுகாப்பானது.

* குடியிருப்புகளில் உள்ள டிரான்ஸ்பார்மர் அல்லது மெயின் எலக்ட்ரிக்கல் பாக்ஸ் ஆகியவற்றை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் திறந்து பராமரிப்பது அவசியம்.

* தீ தடுப்பு உபகரணங்களை குடியிருப்புகளின் சுவர் மூலைகளில் ஆங்காங்கே அமைத்து வைப்பது நல்லது. நவீன ‘பயர் எக்ஸ்டிங்கியூஷர்’ போன்ற எளிய தீயணைப்பு சாதனங்களை குடியிருப்பில் பரவலாக பொருத்த வேண்டும்.

* மின்சார கசிவால் ஏற்படும் தீ, ஆயில் போன்ற பொருட்களால் உருவான நெருப்பு என ஒவ்வொரு விதமான நெருப்புக்கும் தனித்தனியான தீ அணைப்பான்கள் இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

* பல பிளாட்டுகளை உடைய குடியிருப்புகளில் அகலமான ஒன்றுக்கும் மேற்பட்ட வெளியேறும் வழிகள் இருப்பது பாதுகாப்பு,. மேலும், அவசர கால ‘எமர்ஜென்ஸி’ வழிகள் எளிதாக திறந்து மூடும் நிலையில் இருப்பதையும் அவ்வப்போது கவனித்துக்கொள்ள வேண்டும்.

* தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் பல இடங்களில் தீ உணரும் அமைப்புகளை (திவீக்ஷீமீ Se-ns-or) பொருத்துவது நல்லது. அதன் மூலம் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றம், வெப்பம் ஆகியவற்றை சென்சார் சாதனங்கள் முன்னதாகவே உணர்ந்து தீப்பிடிப்பதற்கான ஆரம்ப சூழ்நிலையில், எச்சரிக்கை ஒலியெழுப்பி உஷார்படுத்தும்.

* ஸ்டோர் ரூம்கள், பொருட்களை போட்டுவைக்கும் குடோன்கள் ஆகிய இடங்களில் ஏற்படும் புகையை யாரும் கவனிக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் அந்த பகுதிகளில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அல்லது மின் இணைப்புகள் இருப்பின் கூடுதல் கவனம் அவசியம்.

* அதிகம் உபயோகமில்லாத மரச்சாமான்களை ஒரே அறையில் அடைத்து வைப்பது தவறான முறையாகும்.


Next Story