மேல் தள விரிசல்களுக்கு வல்லுனர் ஆலோசனை


மேல் தள விரிசல்களுக்கு வல்லுனர் ஆலோசனை
x
தினத்தந்தி 8 Jun 2018 10:15 PM GMT (Updated: 8 Jun 2018 11:39 AM GMT)

கட்டிடத்தின் பளுவை சுவர்கள் வழியாக அஸ்திவாரத்துக்கு கொண்டு செல்லும் கட்டமைப்புகளாக நிறைய வீடுகள் உள்ளன.

ஒரு சில வீடுகளில், சுவர்களில் எவ்வித பாதிப்பும் இல்லாத நிலையில், மேல் மாடியின் தளத்தில் வெடிப்புகள் ஏற்படுவது அறியப்பட்டுள்ளது. இந்த குறைபாட்டை எவ்விதம் சரி செய்வது என்பது பற்றி கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிடும் வழிமுறைகளை இங்கே காணலாம்.

கட்டிட வயது

முதலில் வீட்டின் கட்டுமான பணிகள் செய்யப்பட்டு எவ்வளவு காலம் ஆகிறது என்பதை கவனிப்பதோடு, மாடித்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள சுருக்கி அல்லது கான்கிரீட் அமைப்பின் தன்மை மழை அல்லது தண்ணீர் பயன்பாடு காரணமாக, ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். பொதுவாக, மேல் மாடித்தளத்தில் மழை பெய்தால் அது தேங்காமல் 10 நிமிடங்களுக்குள் கீழே வந்துவிடும்படி தள அமைப்பு இருக்க வேண்டும்.

விரிசல்களில் ஈரப்பதம்

பல இடங்களில் ‘ஹைட்ராலிக்’ முறையில் தயாரிக்கப்பட்ட ஓடுகளை சிமெண்டு கலவை கொண்டு ஒட்டப்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. அது போன்ற நிலைகளில் விரிசல்கள் ஏற்பட்டு மழை நீர் தேங்குவதால் ஏற்படும் ஈரப்பதம் காரணமாகவும் வெடிப்புகள் ஏற்படலாம்.

ஈரத்தடுப்பு கலவை

மேலும், மழைநீர் வடிகுழாய்களுக்கு கச்சிதமான வாட்டம் இல்லாவிட்டாலும் பாதிப்புகள் உண்டாகும். மேற்கண்ட நிலைகளில் கட்டிடத்தின் பாதுகாப்பு கருதி மேல் தள காரை அல்லது ஓடுகளை அகற்றி விட்டு 20 மி.மீ கன அளவில் ஈரத்தடுப்பு திரவம் கலக்கப்பட்ட சிமெண்டு கலவை கொண்டு தக்க பூச்சு அமைத்து, சாதாரணமாக மேல் தளத்தில் பதிக்கப்படும் ஒடுகளை, நீர்த்தடுப்பு ரசாயனம் கலந்த சிமெண்டு கலவையை 10 அல்லது 12 மி.மீ கனத்தில் பூசி, அதன்மீது அழுத்திப் பதித்து விட வேண்டும்.

சொரசொரப்பு ‘பாலிஷிங்’

அதன் பிறகு டைல்ஸ் இணைப்புகளில் சரியான ‘கிரவுட்டிங்’ செய்வது முக்கியம். அதன் பிறகு, 3 அல்லது 4 நாட்கள் தண்ணீர் விட்டு, ‘ரப் பாலிஷிங்’ செய்து விடலாம். மறக்காமல், மழைநீர் வடிகுழாய்களை தக்க வாட்டம் இருப்பதுபோல சரி செய்து பதிப்பதும் முக்கியம்.

Next Story