மனம் கவரும் பாரம்பரிய கட்டமைப்பு முறைகள்


மனம் கவரும் பாரம்பரிய கட்டமைப்பு  முறைகள்
x
தினத்தந்தி 8 Jun 2018 10:30 PM GMT (Updated: 8 Jun 2018 11:43 AM GMT)

கட்டுமான துறையில் உள்ள வளர்ச்சிகளுக்கேற்ப இந்திய நகரங்களில் குடியிருப்புகளுக்கான கட்டமைப்பு ஆண்டுக்கு ஆண்டு மாறிக்கொண்டே வருகிறது.

பழமை வாய்ந்த கட்டுமான முறைகளிலிருந்து புதுமையான சர்வதேச தரத்துக்கு கட்டுமான துறையின் தொழில் நுட்ப வளர்ச்சிகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், கிராமப்புறங்களில் பாரம்பரியமும், கலை நயமும் கொண்ட வீடுகள் இன்றும் இருந்து வருவதோடு, பலரது மனதையும் கவர்ந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. நகரங்களிலும் ஆங்காங்கே பல இடங்களில் பழமையான கட்டுமான அமைப்புகள் கொண்ட வீடுகளை இன்றும் காண இயலும்.

தமிழர் பண்பாடு

பாரம்பரியக் கட்டிடக்கலை அமைப்புகளில் தென்னிந்திய அளவில் ஒப்பிடத்தக்க கட்டிடங்களாக, நமது பகுதிகளில் அமைந்துள்ள அக்ரகார வீடுகள் உள்ளன. அவை கலைநயம் மிக்க தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளதை எளிதாக கவனிக்க முடியும். பொதுவாக, கிராமப்புறங்களை இவ்வகை வீடுகள் குறிப்பிட்ட பகுதிகளில் அழகிய வரிசைகளில் அமைந்திருக்கும்.

திண்ணைகள்

ஒவ்வொரு வீட்டிலும் அகலமான வராந்தாக்கள், வீட்டை முழுமையாக சுற்றி வரும்படி அமைக்கப்பட்டிருக்கும். முக்கியமாக அனைத்து வீட்டு வாசலிலும் திண்ணைகள் அமைந்திருக்கும். மாலை வேளைகளில் ஓய்வாக அமர்ந்து இளைப்பாறும் இடமாக இருப்பதோடு, குடும்ப அங்கத்தினர்கள் தங்கள் நண்பர்கள் உள்ளிட்ட உறவினர்களோடு உரையாடும் இடமாகவும் திண்ணைகள் இருந்தன. இதமான வெளிக்காற்று சுலபமாக வரும்படியாகவும் அவை அமைந்திருக்கும். அழகிய கட்டமைப்புகள் கொண்ட வீடுகள் பொதுவாக, கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

அழகிய தூண்கள்


திண்ணை மற்றும் மேற்கூரையை ஆகியவற்றை இணைக்கும் வகையில் மர வேலைப்பாடுகள் கொண்ட பளு தாங்கும் தூண்கள் கச்சிதமாக நிறுத்தப்பட்டிருக்கும். அத்தகைய பாரம்பரிய வீடுகளின் தரைத்தளமானது சிவப்பு நிற பதிகற்கள் அல்லது பளபளப்பான ரெட் ஆக்ஸைடு மூலம் அமைத்திருப்பது வழக்கம். அவற்றின் விஷேச கட்டமைப்பு காரணமாக வெயில் காலத்திலும் குளிர்ச்சியாக இருப்பதை இன்றும் உணரலாம். மேலும், வீடுகளின் உட்புறத்திலும் மென்மையான குளிர்ச்சி பரவி இருப்பதையும் கவனிக்க முடியும்.

களிமண் சுவர்கள்


கிராமப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கூரை வீடுகளின் சுவர்கள் களிமண்ணால் அமைத்துள்ளதால், வெளிப்புற வெப்பத்தாக்கம் அதற்குள் அதிகமாக இருப்பதில்லை. களிமண் சுவர்கள் இன்றைய நிலையில் பசுமை கட்டமைப்பு முறையாக அறியப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. சுவர்கள் மற்றும் தரைத்தளங்களில் அமைக்கப்படும் பூச்சுகள் காரணமாக நோய்க்கிருமிகளைப் பரப்பும் பூச்சிகளும் வீட்டுக்குள் வராமல் தடுக்கப்படுகின்றன.

கூட்டு முயற்சி

தரையில் விரித்து பயன்படுத்த மூங்கில்களால் உருவாக்கப்பட்ட பாய்கள் மற்றும் மூங்கில் தடுப்புச்சுவர்களும் அமைக்கப்பட்டுள்ளதை இன்றும் பல இடங்களில் காணலாம். கிராமப்புற வீட்டைச் சுற்றியுள்ள தோட்டங்களில் வளர்ந்த மரங்களை வீட்டு உரிமையாளரின் அனுமதியுடன் மரத்தச்சர்கள் வெட்டி, அவற்றைக்கொண்டு வீட்டுக்குத் தேவையான அலங்கார வேலைப்பாட்டுடன் கூடிய தூண்கள் உள்ளிட்ட கதவு, ஜன்னல்களை தயார் செய்வார்கள். மேலும், தரைத்தள பணிகளில் மண்பானைகளை தயார் செய்பவர்களே உறுதுணையாக இருந்து, கூட்டு முயற்சியாக வண்ண தரைத் தளங்கள் அமைக்கப்பட்டன. 

Next Story