கட்டமைப்புகளுக்குள் குளிர்ச்சி தரும் நவீன கட்டுமான அணுகுமுறை


கட்டமைப்புகளுக்குள் குளிர்ச்சி தரும் நவீன கட்டுமான அணுகுமுறை
x
தினத்தந்தி 9 Jun 2018 7:38 AM GMT (Updated: 9 Jun 2018 7:38 AM GMT)

இயற்கையான முறையில் வீடுகளுக்குள் வெப்பம் மற்றும் குளிர் போன்ற பாதிப்புகள் இல்லாத வகையில், உலக அளவில் பல்வேறு புதிய யுக்திகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

நமது பகுதிகளில் ஆங்காங்கே நடைமுறையில் உள்ள ‘இடைவெளி கொண்ட சுவர்‘ அமைப்பானது பழங்காலம் முதலாக நடைமுறையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

நவீன அணுகுமுறை

‘இடைவெளி கொண்ட சுவர்’ (Cavity wall insulation) என்ற அடிப்படையில் மேற்கண்ட சுவர் கான்கிரீட் கொண்டு அமைக்கப்படுகிறது. முழுவதும் கான்கிரீட் கொண்டு அமைக்கப்படுவதால் கட்டிடம் உறுதியாக இருக்கும். தமிழர்களின் கட்டிடக்கலை சிறப்பு வாய்ந்தது. கற்காலம் முதல் தற்காலம் வரை அந்த கலைச்சிறப்பு நவீன அணுகுமுறைகளோடு இன்றும் தொடர்கிறது.

வெப்பத்தின் தாக்கம்

சிமெண்டு பிரதானமாக கொண்டு கட்டமைக்கப்பட்ட இன்றைய கான்கிரீட் வீடுகளில் ஏர்-கண்டிஷன் வசதிகள் அவசியம் வேண்டும் என்ற அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் உள்ளது. அதற்கு நல்ல மாற்றுவழியாக மேற்கண்ட தொழில்நுட்பத்தை குறிப்பிடலாம். தமிழகத்தில் இந்த முறை தற்போது தென்மாநிலங்களில் உள்ள சில கட்டுமான பொறியாளர்களால் கடைபிடிக்கப்பட்டு வருவதாக அறியப்பட்டுள்ளது.

கான்க்ரீட் சுவர்

மேற்கண்ட சுவர் அமைப்பில், கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்து மேல்தளம் வரை எந்த இடத்திலும் செங்கல் பயன்பாடு கிடையாது. அனைத்து வகை சுவர்களும் கான்கிரீட் மூலமே அமைக்கப்படுகிறது. அதாவது, 9 அங்குலம் அளவு கொண்ட சுவர்களின் உள்பகுதியில் 3 அங்குல இடைவெளி கொண்டதாக அமைக்கப்படும். அதன் இருபுறங்களிலும் 3 அங்குல அளவு கொண்ட கம்பிகள் கட்டப்பட்ட கான்கிரீட் அமைப்பாக இருக்கும்.

கம்பிகள் இணைப்பு

அத்தகைய சுவர்களின் மீது கட்டிடம் மேல்பகுதி வரை கட்டப்படுகிறது. தரைத்தளம் உள்ளிட்ட அனைத்து பக்கவாட்டு சுவர்களும் கான்கிரீட் கம்பிகளால் உள்புறம் இணைக்கப்பட்டுள்ளன. மேல்மாடியில் வெப்பம் உட்புகாத வெள்ளை நிறத்தில் குளிர்ச்சி தரும் தளஓடுகள் பதிக்கப்படும்.

வெப்பநிலை குறையும்

எல்லாவிதமான சுவர்களும் உள்பகுதியில் வெற்றிடம் கொண்டதாக கட்டப்பட்டுள்ளதால் வெயில் காலத்தில் வீட்டுக்குள் வெப்பத்தின் அளவு குறைவதால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. அதாவது, வெளிப்புற வெப்ப நிலையை விட உள்அறைகளில் 5 டிகிரி அளவில் குறைவான வெப்பநிலை காரணமாக குளிர்சாதன வசதியில் பயன்பாடு பெருமளவுக்கு குறைந்துவிடுகிறது. மேலும், குளிர் காலத்தில் கட்டிடத்தின் உள்ளே குளிரின் பாதிப்பு இல்லாமல், அறை வெப்பநிலையே இருந்து கொண்டிருக்கும்.

காற்று ‘இன்சுலேட்டர்’

கட்டிடத்தின் வெளிப்புறத்தில் நிலவும் குளிரையும், வெப்பத்தையும், சுவர்களின் உள்பகுதியிலுள்ள வெற்றிடம் தடுத்து விடுகிறது. அதாவது, இடைவெளியில் உள்ள காற்று இன்சுலேட்டராக செயல்படுகிறது. பொதுவாக, செங்கல் சுவர்கள் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் இவ்வகை சுவர்களில் ஏற்படுவதில்லை என்று இந்த கட்டுமான பணியை செய்த பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 

Next Story