கட்டிட சுவர்களை பாதுகாக்கும் மேற்பூச்சு வகைகள்


கட்டிட சுவர்களை பாதுகாக்கும் மேற்பூச்சு வகைகள்
x
தினத்தந்தி 18 Aug 2018 4:04 AM GMT (Updated: 18 Aug 2018 4:04 AM GMT)

எந்த ஒரு கான்கிரீட் கட்டமைப்பிலும் செய்யப்படும் பெயிண்டிங் வேலைகள் இரண்டு விதமான நோக்கங்களை கொண்டதாக உள்ளன.

முதலாவது, கட்டுமானத்தின் அழகை வெளிப்படுத்துவதாகவும், இரண்டாவது அதன் வெளிப்புற சுவர் பரப்புக்கு பாதுகாப்பாக அமைவதும் ஆகும்.

‘பிரைமர் கோட்டிங்’

பொதுவாக, பெயிண்டிங் பணிகளை செய்வதற்கு முன்னர் சுவரின் மேற்பரப்பில் பிரைமர் கோட்டிங் பூசப்பட வேண்டும். கட்டுமான பணிகள் முடிந்த பிறகு சுவர்களுக்கு பிரைமர் கோட்டிங் பூசுவது குறித்து பலருக்கும் சந்தேகம் இருப்பதுண்டு. அதாவது, முதலில் பிரைமர் கோட்டிங் அடிக்காமல் பெயிண்டு அடிப்பதையே இரண்டு முறை செய்தால் என்ன..? என்றும் பலருக்கும் சந்தேகம் எழுவதுண்டு.

பட்டி பூசும் முறை


கட்டுமான பணிகள் முடிந்து, மூன்று வாரத்திற்கு பின்னர் சுவரை பாதுகாக்கும் பட்டி பூச வேண்டும். அல்லது சுவரின் மேற்பரப்புகள் மற்றும் மேல் தளத்திற்கு சிமெண்ட் பெயிண்டு பூசலாம். அதன் மூலம், சுவர்களில் உள்ள சிறுசிறு துளைகள் அடைபட்டு விடும். அதற்கு மேலாக பிரைமர் பெயிண்டு ஒரு முறை அடித்த பின்னர், இரண்டு முறை எக்ஸ்டீரியர் எமல்ஷன் பெயிண்டு பூசப்படவேண்டும். சில இடங்களில், வெள்ளை சிமெண்டு அல்லது பிரைமர் முதலில் பூசப்படுவதும் உண்டு. ஆனால், பிரைமர் பூசிவிட்டு பட்டியை அடிப்பது தவறானது.

இரண்டு முறை பிரைமர்

இரண்டு தடவை பட்டி மற்றும் ஒருமுறை பிரைமர் பூச்சு கொடுத்துவிட்டு அதன் பின்னர் இரு முறை எமல்ஷன் பெயிண்டு பூசப்படுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. பட்டி பூசுவதை தவிர்க்க இரண்டு முறை பிரைமர் பூசும் முறையையும் சிலர் கடைப்பிடிக்கின்றனர்.

உள்பக்க சுவர்கள்

வீடுகளின் உள்பக்கம் அமைந்துள்ள சுவர்களில் வெள்ளை பெயிண்டு அடித்த பின்னர், விருப்பமான வண்ணத்தை இரண்டு கோட்டிங் அடிக்கலாம். ஆனால், ஒரே தடவையில் இரண்டு கோட்டிங்கும் பூசுவது கூடாது. முதல் கோட்டிங் அடித்த பின்பு, வீட்டின் கிரகப்பிரவேச பணிகள் முடிந்த பின்னர் இரண்டாவது கோட்டிங் பூசுவது நல்லது.

கதவு மற்றும் ஜன்னல்கள்

பெயிண்டிங் பணிகள் முடிந்த பிறகு கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பொருத்தும் பணிகளை முடித்துக் கொள்ளலாம். வீட்டுக்குள் வேறு இடங்களில் நிலைகளை அமைத்திருந்தால் அங்கு கதவுகள் அமைப்பதா..? அல்லது ஸ்கிரீன் போதுமா..? என்பதையும் முடிவு செய்துகொள்ளலாம்.

‘வார்னிஷ் கோட்டிங்’

மேற்கண்ட பணிகள் முடிந்தவுடன் கதவு, ஜன்னல்களுக்கு எனாமல் பெயிண்டு அடிக்க வேண்டும். அதன் மூலம் கதவு நிலைகள், ஜன்னல் கிரில்கள் பளபளப்பாக இருக்கும். எனாமல் பெயின்ட் அடித்த பிறகு அதன் மேல் ஒரு கோட்டிங் வார்னிஷ் அடித்தால் கூடுதல் பளபளப்பான தோற்றம் கிடைக்கும். பொதுவாக, பெயிண்டு வகைகள் குறைந்தது மூன்று வருடங்களுக்கு நல்ல பொலிவோடு இருக்கவேண்டும் என்ற நிலையில் சற்று விலை கூடுதலாக இருந்தாலும் தரமானவற்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது அவசியம். 

Next Story