குடியிருப்பு திட்டங்களுக்கான கட்டுமான அனுமதி


குடியிருப்பு  திட்டங்களுக்கான  கட்டுமான  அனுமதி
x
தினத்தந்தி 24 Aug 2018 10:00 PM GMT (Updated: 24 Aug 2018 12:15 PM GMT)

சென்னையில் தலைமை அலுவலகத்தை கொண்ட நகர ஊரமைப்பு இயக்ககத்தின் அதிகார வரம்பு, சென்னை தவிர்த்த தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகள் வரை உள்ளது.

சென்னை பெருநகர எல்லைக்கு வெளிப்புறமாக அமைந்துள்ள பகுதிகள் மற்றும் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் உள்ள நிலங்கள் மற்றும் மனைகளுக்கான லே–அவுட் (Layout) அங்கீகாரம், முறைப்படி விவசாயம் செய்ய இயலாத நிலங்களை குடியிருப்புகளுக்கு ஏற்ற நிலமாக மாற்றி அறிவித்தல் (
Conversion
), அடுக்குமாடிக் குடியிருப்பு அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள நகர ஊரமைப்பு இயக்ககம் (Directorate of Town and Country Planning -DTCP) அனுமதி அளிக்கிறது.

தலைமை அலுவலகம்

சென்னையில் தலைமை அலுவலகத்தை கொண்ட நகர ஊரமைப்பு இயக்ககத்தின் அதிகார வரம்பு, சென்னை தவிர்த்த தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகள் வரை உள்ளது. அதன் அடிப்படையில், லே–அவுட் நிலங்களுக்கு அனுமதி வாங்க வேண்டிய பகுதி பத்து ஏக்கர் என்ற அளவுக்கும் குறைவாக இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட மாவட்ட டி.டி.சி.பி அலுவலகமான உள்ளூர் திட்ட குழுமத்திடம் (
Local Planning Authority
) அனுமதி பெறவேண்டும். லே–அவுட் ஏரியா பத்து ஏக்கருக்கும் அதிகமாக இருந்தால் சென்னை டி.டி.சி.பி தலைமை அலுவலகத்தின் அனுமதி அவசியம்.

கிராமப்பகுதி கட்டுமானம்

குடியிருப்புகளுக்கான கட்டுமான திட்டம் கிராமப் பகுதியில் நடக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில் லே–அவுட் பிளான் சமர்ப்பிக்கப்படவேண்டும். பிளான் சரி பார்க்கப்பட்டு, மாவட்ட டி.டி.சி.பி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் அனுமதி கொடுக்கப்படும் அல்லது மாற்று பிளான் தரப்படலாம். 

மனையின் அளவுகள்

மேற்கண்ட பிளானில் சாலைகள், பூங்காவுக்கான இடம், பொது உபயோகத்துக்கான இடம் என்று பிரிக்கப்பட்டிருப்பதை கணக்கில் கொண்டு புரமோட்டர்கள் அல்லது மனை உரிமையாளர்கள் அவற்றில் மாற்றங்கள் செய்யாமல், மனைகளை விற்பனை செய்வது அல்லது கட்டுமான பணிகளை மேற்கொள்வதே பாதுகாப்பானது. பொதுவாக, 24 செண்ட் (ஏறக்குறைய கால் ஏக்கர்) அளவுக்கும் குறைவாக உள்ள மனை அல்லது நிலங்களுக்கு கிராமப் பஞ்சாயத்து அனுமதி போதுமானது. அந்த நிலத்தின் ஒரு பகுதியை தனியாக வாங்க அல்லது கட்டிடம் கட்டுவதற்கு பஞ்சாயத்து அனுமதி தேவை. 24 செண்ட் அளவுக்கும் மேற்பட்ட நிலப்பகுதிகளுக்கான லே–அவுட் அனுமதியை டி.டி.சி.பி அமைப்பிடம்தான் பெறவேண்டும்.

நில உபயோக மாற்றம்

மேலும், விவசாய நிலங்கள், உற்பத்தி அல்லது தொழிற்சாலை வளர்ச்சி ஆகியவற்றிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களை குடியிருப்பு பகுதிகளாக மாற்றுவதற்கும் நகர ஊரமைப்பு இயக்ககத்தின் அனுமதி வேண்டும். தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்ற வேண்டிய நிலையில் அந்த நிலத்தின் வரைபடம் (
TOPO Plan
), நிலத்தின் பத்திரங்கள் ஆகியவற்றை டி.டி.சி.பி அலுவலகத்தில் அளிக்கவேண்டும். அதில், குடியிருப்பு பகுதியாக நிலம் மாற்றப்பட்ட பிறகு, அதற்கான பயன்பாடு பற்றி தெரிவிக்கப்படவேண்டும்.

அதன் பிறகு, சம்பந்தப்பட்ட நிலம் ஆராயப்பட்டு, அதற்குரிய தகவல்கள் மற்றும் ஆட்சேபணைகள் ஆகியவற்றை கேட்டறிய 2 நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்படும். ஆட்சேபணை இல்லாத பட்சத்தில் நிலத்தின் வகையை மாற்றம் செய்வதற்கான அனுமதி அளிக்கப்படும்.

சாலை அகலம்

பொதுவாக, நான்கு மாடிக்கு மேல் உள்ள கட்டிடங்கள் அடுக்குமாடிகள் என்ற நிலையில் அதற்கான சாலை அகலம், நிலத்தின் அகலம், ‘புளோர் சைஸ் இண்டெக்ஸ்’ (Floor size index), கட்டிடத்தின் அகலம் போன்ற நடைமுறைகளுக்கேற்ப திட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. அதாவது, பத்து அடுக்கு மாடி என்றால், அதற்கான சாலை அகலம் குறைந்த பட்சம் 80 அடியாகவும், கட்டிடம் அமையும் நிலத்தின் அகலம் 24.4 மீட்டராகவும் (80 அடி) இருக்கவேண்டும். மேற்கண்ட அளவுகள் குறையும் பட்சத்தில் பிளானுக்கு அனுமதி பெறுவது சிக்கலாகி விடும்.

Next Story