கட்டுமான பணிகளுக்கு இறக்குமதி மணல்


கட்டுமான  பணிகளுக்கு இறக்குமதி  மணல்
x
தினத்தந்தி 5 Oct 2018 9:30 PM GMT (Updated: 5 Oct 2018 10:11 AM GMT)

தமிழக அளவில் பரவலாக ஏற்பட்ட மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் மணலுக்கு மாற்றாக எம்–சாண்ட் பயன்படுத்துவது பற்றி அரசு வலியுறுத்தியது.

மிழக அளவில் பரவலாக ஏற்பட்ட மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் மணலுக்கு மாற்றாக எம்–சாண்ட் பயன்படுத்துவது பற்றி அரசு வலியுறுத்தியது. பல இடங்களில் எம்–சாண்ட் உபயோகத்தில் இருந்து வந்தாலும், பொதுமக்கள் மத்தியில் போதிய அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. அதன் அடிப்படையில் வெளிநாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.

இறக்குமதி மணல் விற்பனை

அதன்படி மலேசியாவில் இருந்து கிட்டத்தட்ட 56 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான மணல் எண்ணூர் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், மேலும், கூடுதல் மணலை இறக்குமதி செய்யவும் கட்டுமான நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் விற்பனை பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளனர்.

இணைய தளத்தில் தகவல்கள் 

இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனையை ஆன்லைனில் நடத்துவதற்கு புதிய சாப்ட்வேர் உருவாக்கும் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, தமிழ்நாடு மணல் இணைய சேவை மூலம் விற்பனைக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மணல் தேவை உள்ளவர்கள்
https://www.tnsand.in 
என்ற இணைய தளம் மூலமாகவும், அதற்கான கைபேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொண்டு தாங்கள் விரும்பும் இடத்திலிருந்து மணலை பெற்றுக்கொள்ளலாம்.

முன்பதிவு முறையில் மணல் விநியோகம்

வீடு கட்டுபவர்களால் செய்யப்பட்ட முன்பதிவு அடிப்படையில் அவர்களது இடத்திற்கே சென்று மணல் வழங்கப்பட இருப்பதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தாமதமின்றி மணல் கிடைக்கும். குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் நடந்து வரும் கட்டுமான பணிகளுக்கான மணல் தேவை குறிப்பிடத்தக்க அளவுக்கு பூர்த்தி ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story