குடியிருப்புகளை விரைவாக கட்டமைக்க புதிய முறை


குடியிருப்புகளை  விரைவாக  கட்டமைக்க  புதிய  முறை
x
தினத்தந்தி 5 Oct 2018 10:00 PM GMT (Updated: 5 Oct 2018 11:34 AM GMT)

சமீப காலங்களில் கட்டுமானத்துறையில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப முறைகளில் பல்வேறு உலகளாவிய மாற்றங்கள் விரைவாகவும், சுலபமாகவும் குடியிருப்பு பகுதிகளை கட்டி முடிக்க உதவி செய்யும் வகையில் அமைந்திருக்கின்றன.

மீப காலங்களில் கட்டுமானத்துறையில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப முறைகளில் பல்வேறு உலகளாவிய மாற்றங்கள் விரைவாகவும், சுலபமாகவும் குடியிருப்பு பகுதிகளை கட்டி முடிக்க உதவி செய்யும் வகையில் அமைந்திருக்கின்றன. அதன் வரிசையில் ‘மோனோலித்திக்’ என்ற தொழில் நுட்பமும் ஒன்றாக உள்ளது. அதாவது, இரும்பு கம்பிகளை உள்ளீடாக வைத்து, கான்கிரீட் கலவை மூலம் சுவர்களை கட்டமைப்பது இந்த முறையின் சிறப்பாகும்.

மேல்நாட்டு தொழில்நுட்பம்

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இந்த தொழில்நுட்பம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான நிலையில், ஐரோப்பிய நாடுகளிலும் இந்த முறை பிரபலமானது. இன்றைய நிலையில் தமிழக அளவில் குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களும் ‘மோனோலித்திக்’ முறையை பயன்படுத்தி கட்டுமான பணிகளை செய்து வருகின்றன.

வீட்டு வசதி திட்டத்துக்கு ஏற்றது

மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அமைக்க இருக்கும் வீடுகளுக்கு இந்த புதிய முறை ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 13 லட்சம் புதிய வீடுகளை அமைக்க கிட்டத்தட்ட ரூ. 63 ஆயிரம் கோடி தேவை என்ற நிலையில், குறைந்த செலவில், அதிக எண்ணிக்கையில் வீடுகளை அமைக்க ‘பிரிபேப்ரிகேட்டடு பேனல்’ உள்ளிட்ட இதர தொழில் நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டியதாக உள்ளது.

பொறியாளர்கள் ஆலோசனை

மேற்கண்ட செயலாக்கங்களுக்கு மத்தியில் செங்கல் மற்றும் ஹாலோபிளாக் போன்றவை இல்லாமல் ‘மோனோலித்திக்’ முறையில் புதிய குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்த முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதற்கான வழிமுறைகள் குறித்து அரசின் பொறியாளர்கள் குழு ஆலோசித்து வருகிறது. விரைவில் அரசின் ஒப்புதல் பெற்று இந்த தொழில்நுட்ப முறைப்படி குடியிருப்புகள் அமைக்கப்படலாம்.

அடுக்குமாடிகள் அமைப்பு

குறிப்பாக, தமிழக அளவில் முதன்முறையாக செங்கல், ‘ஹாலோ பிளாக்‘ போன்ற கற்களை பயன்படுத்தாமல், ‘மோனோலித்திக்‘ தொழில் நுட்பம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கவும் குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டு உள்ளது.

வழக்கமான முறையில் செலவு

பொதுவாக, செங்கல் மற்றும் ஹாலோபிளாக் பயன்படுத்தி சுவர் அமைக்க ஒரு சதுரடிக்கு சுமாராக ரூ. 95 முதல் 115 வரை செலவு ஆகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், அவற்றின் விலையுடன் இணைப்பு மற்றும் பூச்சு வேலைக்கான சிமெண்டு கலவை என்ற அடிப்படையில் செலவுகள் மேலும் கூடுதல் ஆகலாம்.

புதிய முறையில் செலவு

ஆனால், ‘மோனோலித்திக்’ முறையில் கான்கிரீட் சுவர்கள் அமைக்க சிமெண்டு, ஜல்லி, மணல், கம்பி மற்றும் ‘வாட்டர் புரூப் ரசாயனங்கள்’ ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு ஒரு சதுர அடி கட்டுமானத்துக்கு தோராயமாக ரூ. 80 செலவு ஆகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Next Story