உறுதியான கட்டிட வடிவமைப்பில் தொழில்நுட்ப அணுகுமுறைகள்


உறுதியான கட்டிட வடிவமைப்பில் தொழில்நுட்ப அணுகுமுறைகள்
x
தினத்தந்தி 10 Nov 2018 9:08 AM GMT (Updated: 10 Nov 2018 9:08 AM GMT)

அனைத்து கட்டுமான அமைப்புகளும் அவற்றின் எடையுடன் குடியிருப்பவர்கள் மற்றும் அவற்றில் உள்ள இதர பொருள்களின் எடையையும் தாங்கி நிற்கவேண்டும்.

அதன் அடிப்படையில் கட்டிட தொழில்நுட்ப வல்லுனர்கள் ஒரு கட்டமைப்பை கச்சிதமாக வடிவமைக்கிறார்கள்.

இயற்கை பாதிப்புகள்

குறிப்பாக, காற்று வீசும் திசை, சுற்றுப்புற நில அமைப்புகள் மற்றும் நில அதிர்வுகள் போன்ற இயற்கை பாதிப்புகள் மற்றும் அதன் காரணமாக உருவாகும் எடையை கட்டுமானங்கள் கச்சிதமாக அதன் அஸ்திவார அமைப்புக்கு மாற்றித்தரும் பொறியியல் நுட்பங்களும் அவற்றின் வடிவமைப்பில் கணக்கில் கொள்ளப்படுகின்றன.

மேற்கண்ட அம்சங்கள் இந்திய தர நிர்ணய குறியீட்டு கழகத்தின் விதிகளின்படி கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றில் ஏதேனும் குறைகள் ஏற்படும் நிலையில் கட்டிடங்களில் விரிசல்கள், வெடிப்புகள் தோன்றி பாதிப்புகளை உருவாக்கலாம்.

’பிரேம்டு ஸ்ட்ரக்சர்கள்’

சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகள் ‘பிரேம்டு ஸ்ட்ரக்சர்’ அமைப்புகளாக அதாவது, பீம்கள் மற்றும் பில்லர்கள் போன்ற சுமை தாங்கும் கட்டிட பகுதிகளை உள்ளடக்கி இருக்கின்றன.

அத்தகைய குடியிருப்புகளில் உள்ள அறைகளுக்கான பிரிப்பு சுவர்கள் மற்றும் உட்புற சுவர்கள் ஆகியவை கட்டிடம் எதிர்கொள்ளும் சுமைகளை தாங்கும் நிலையில் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகள் குறைவு என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கச்சிதமான வரிசை

கட்டிடத்தின் ‘பீம்கள்’ மற்றும் ‘பார்ட்டிஷன்’ சுவர்கள் ஆகியவை சரியான வரிசைக்கிரமத்தில் அமைக்கப்பட வேண்டும். அதற்கு மாறாக, முதலில் உட்புற சுவர்கள் மற்றும் தடுப்பு சுவர்களை அமைத்த பின்னர் அதற்கு மேலாக கான்கிரீட் பீம்களை அமைக்கும் பட்சத்தில் கூடுதலான சுமை தரைப்பகுதியை அழுத்தும் நிலையில் செங்கல் சுவர்களில் விரிசல்கள் ஏற்படலாம்.

பெரும்பாலான இடங்களில் நடக்கும் கட்டுமான பணிகளில் முதலில் செங்கல் சுவரை எழுப்பிய பின்னர், அதனை பீம்கள் அல்லது பில்லர்கள் அமைப்பதற்கான முட்டுக்களாக பயன்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கையானது, செங்கல் கட்டுமானத்தில் உள்ள துவாரங்கள் கான்கிரீட்டிலிருந்து ஈரத்தை உறிஞ்சுவதன் காரணமாக பீம் அல்லது தூண்களின் உறுதி பாதிக்கப்படுகிறது.

அதன் காரணமாக, கட்டிடங்களுக்கான பீம் மற்றும் பில்லர் ஆகியவற்றை முற்றிலுமாக அமைத்த பின்னரே அறை பிரிப்பு சுவர்கள் உள்ளிட்ட உட்புற சுவர்களை கட்ட வேண்டும். பின்னர், பில்லர் அல்லது பீம்களோடு சுவர்கள் இணைப்பு பகுதியில் இடைவெளிகள் இல்லாது கவனித்துக்கொள்ளவேண்டும்.

மின் ஒயர் அமைப்புகள்


பிரதான சுவர்கள் எப்போதும் கட்டிடத்தின் நிலைத்தன்மைக்கு ஏற்ப மற்ற சுமைகளை தாங்கி நிற்கும் என்ற நிலையில் ஒயர்களுக்கான குழாய்களை பொருத்த அவற்றில் துளை அல்லது காடி அமைப்பது அவற்றை வலுவிழக்க செய்யலாம்.

அதனால், மொத்த கட்டிடத்தையும் ஒருங்கிணைந்த நிலையில் பீம்கள் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு, சுவர்கள் அனைத்து இடைவெளிகளிலும் சரியாக அமைத்து பலப்படுத்த வேண்டும். இந்த எளிய செயல்பாடுகளை மேற்கொள்ளவதன் மூலம் புயல் மற்றும் நில நடுக்கம் போன்ற இயற்கை பாதிப்புகளால் ஏற்படும் பக்கவாட்டு அழுத்தங்களை அவை தாங்கி நிற்கும். 

Next Story