தண்ணீர் சிக்கனத்தில் புதுமையான வழிமுறை


தண்ணீர் சிக்கனத்தில் புதுமையான வழிமுறை
x
தினத்தந்தி 17 Nov 2018 9:37 AM GMT (Updated: 17 Nov 2018 9:37 AM GMT)

திரவ தங்கமாக குறிப்பிடப்படும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற விஷயத்தில் உலக நாடுகள் ஒரே கருத்தை கொண்டதாக உள்ளன.

பல்வேறு கட்டுமான தொழில்நுட்ப முறைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை இன்றைய சூழலில் தண்ணீர் சிக்கனத்துக்கு ஏற்றதாக மாற்றி அமைக்கப்பட்டு வருவதும் பரவலான விஷயமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் சிக்கனத்துக்கு பெயர் பெற்ற ஜப்பான் நாட்டில் ‘வெஸ்டர்ன் டாய்லெட்’ அமைப்பை தண்ணீர் சேமிப்புக்கு பயன்படும் விதத்தில் புதுமையாக மாற்றி உள்ளனர். இந்த முறைப்படி கை கழுவும் வாஷ்பேசினை அதனுடன் இணைத்து தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, வாஷ்பேசினில் கை கழுவ பயன்படும் நீர் டாய்லெட் உபயோகத்துக்கும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட புது முறைப்படி ‘வாஷ்பேசின் பிளஷ் டேங்க்’ தண்ணீர் சப்ளைக்கு சுமார் 90 லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டி கழிவறையில் பொருத்தப்பட்டிருக்கும். வீட்டில் உள்ள சமையல் அறை, உணவு உண்ணும் அறை மற்றும் குளியல் அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டு வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அந்த தொட்டிக்கு வந்து சேருகிறது.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் மேல் தளங்களில் அமைக்கப்பட்டுள்ள குளியல் அறையில் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, நேராக கீழ் தளத்தில் உள்ள கழிவறை பிளஷ் டேங்கிற்கு செல்லும்படி குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கும். அந்த தண்ணீே-ரையே கழிவறைக்கு பயன்படுத்துவதன் மூலம் தினமும் சுமார் 35 லிட்டருக்கும் மேலாக உபயோகப்படுத்தப்பட்ட தண்ணீர் மீண்டும் பயன்படுகிறது.

மேற்கண்ட அமைப்புகள் மூலம் ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 800 லிட்டர் சேமிப்பு என்ற நிலையில் ஒரு வருடத்துக்கு சுமார் 9,000 லிட்டர் அளவுள்ள தண்ணீர் மறுசுழற்சி செய்யப்பட்டு பயன்படுகிறது. இதன் மூலம் ஒரு வருடத்தில் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை ஜப்பான் மக்கள் சேமிப்பதாக தெரிய வந்துள்ளது.

Next Story