படரும் கொடி போன்ற சோலார் பேனல்கள்


படரும் கொடி போன்ற சோலார் பேனல்கள்
x
தினத்தந்தி 16 March 2019 9:28 AM GMT (Updated: 16 March 2019 9:28 AM GMT)

சமீப காலங்களில் புதிய தொழிற்சாலைகள், பெருகும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் புதிய தொழில் நுட்பத்தில் உருவான மின் சாதன பொருட்கள் ஆகியவற்றின் உபயோகம் காரணமாக மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளது.

 அதன் அடிப்படையில் இப்பொழுது சூரிய மின் சக்தி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. சூரிய மின் சக்தியை அதிகமாக பயன்படுத்தவேண்டும் என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சூரிய ஒளி மின்சக்தியை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தொழில்நுட்பங்களும், பொருளாதார சிக்கலும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

திரவ நிலை சோலார் பேனல்கள்

சூரிய ஒளி மின் சக்தி தயாரிப்பு முறையை எளிதாக மாற்றும் தொழில் நுட்பத்தை கண்டறிய வேண்டும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. தற்போது, திரவ நிலையில் உள்ள சோலார் பெயிண்டுகள் மூலம் சூரிய ஒளி மின் சக்தியை தயாரிக்கும் தொழில்நுட்பம் அதன் ஆராய்ச்சி நிலையிலிருந்து விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாக தெரிய வந்துள்ளது.

குறைந்த பட்ஜெட் தயாரிப்பு

சூரிய ஒளி ஆற்றலிலிருந்து மின்சாரத்தை உருவாக்க, இதுவரை பேனல்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது, திரவ வடிவ பேனல்களை தயாரித்து, பெயிண்டு போல பூசி, மின்சக்தியை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அதன் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.பொதுவாக, ‘பாலி கிரிஸ்டலைன் சிலிகான்’ என்ற ரசாயனத்தை பயன்படுத்தி, சூரிய சக்தி மின் தகடுகள் தயார் செய்யப்படுகின்றன. இந்த முறை அதிக பட்ஜெட் கொண்டதாக இருப்பதால், ‘ஆர்கானிக்’ வகை பொருட்களை சூரிய மின் சக்தி தகடாக பயன்படுத்தி, குறைவான பட்ஜெட்டில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும், அந்த ரசாயனம் திரவ வடிவில் இருப்பதால், சுவர்கள், தரை உள்ளிட்ட பல பகுதிகளில் வண்ண பூச்சுபோல எளிதில் பயன்படுத்தலாம். சூரிய ஒளி படியும் பகுதிகளில் இதை பூசுவதன் மூலம் சுலபமாக மின்சார உற்பத்தியை செய்யலாம்.

‘பிலிம் டைப் பேனல்கள்’

தரை மற்றும் சுவர் பகுதிகளில் சோலார் பேனல் பெயிண்டை பயன்படுத்தி, சுவருக்கு சுவர் மின்சார உற்பத்தியை மேற்கொள்வது சாத்தியம் என்று நியூயார்க் மாநில பபல்லோ பல்கலைக்கழக எலக்ட்ரிகல் என்ஜினியரிங் துறை பேராசிரியர் கியாங் கான் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமில்லாமல், கார்பனை அடிப்படையாக கொண்ட சிறு மூலக்கூறுகள், பாலிமர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பிலிம் வகை சோலார் பேனல்களை, குறைந்த செலவில் தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக கியாங் கான் தெரிவித்துள்ளார்.

படரும் கொடி பேனல்கள்

மேலும், செயற்கை இலைகளை கொண்டு கொடிகளாக தயாரிக்கப்பட்டுள்ள ‘சோலார் ஐவி’ ( Solar Ivy) என்று பெயர் கொண்ட கொடிகளை வீட்டின் வெளிப்புற சுவர்களில், இயற்கையான கொடிகளை போன்று படர விட்டும், வீட்டுக்கான மின்சார தேவையை பூர்த்தி செய்து கொள்ள இயலும். அந்த இலைகளில் நுண்ணிய ‘போட்டோ வோல்டெய்க்’ தகடுகள் பொருத்தப்பட்டிருப்பதால், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தயாரிப்பு அதன் இறுதிக்கட்ட நிலையை அடைந்து பல்வேறு மேலை நாடுகளில் சோதனை முயற்சியாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

Next Story