சர்வதேச நடைமுறைகள் கொண்ட அரசின் புதிய கட்டிட விதிகள்


சர்வதேச நடைமுறைகள் கொண்ட அரசின் புதிய கட்டிட விதிகள்
x
தினத்தந்தி 20 April 2019 2:56 PM GMT (Updated: 20 April 2019 2:56 PM GMT)

வீட்டு மனைப்பிரிவுகள் மற்றும் கட்டுமானங்களுக்கு தேவையான அனுமதிகளை பெறுவதற்கான விதிமுறைகள் பல வகைகளாக இருந்து வந்தன.

தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம்-1971, சென்னை மாநகராட்சி சட்டம்-1919, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம்-1920, தமிழ்நாடு ஊராட்சி சட்டம்-1994 மற்றும் பிற மாநகராட்சிகளுக்கான சட்டங்கள் என்று தனித்தனியாக இருந்து வந்த நிலையில், அவற்றை இணைத்து ஒரே தொகுப்பாக மாற்ற அரசு முடிவெடுத்தது.

அதன் அடிப்படையில், வாழ்க்கையின் அடிப்படைகளில் ஒன்றான வீட்டு வசதியை அனைவரும் பெற வேண்டும் என்ப நோக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்-2019 உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நகரமைப்பு செயல் திட்டம்-2016, மத்திய அரசின் மாதிரி கட்டிட விதிகள், தேசிய கட்டிட வழிமுறைகள், பிற ம ாநிலங்களில் உள்ள விதிகள் ஆகிய சிறப்பு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட் டுள்ளன.

பாதுகாப்புக்கான பொது விதிகள்

வீடுகள் கட்டுவதற்காக அனுமதிக்கப்படும் தளப்பரப்பு அளவு, கட்டிடத்தின் உயரம் மற்றும் தளங்கள் எண்ணிக்கை ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பக்கவாட்டு இடைவெளி அளவுகளும் குறைக்கப்பட்டுள்ளன. புதிய விதிகளின் கீழ் கட்டுமான அனுமதியை எளிதாக பெறலாம் என்பதுடன், கட்டிடப் பாதுகாப்பை உறுதி செய்யவும், விதிமீறல்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து தவிர்க்கும் வகையில் பொது விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன.

புதிய விதிகள், மனைப்பிரிவுகளை நெறிமுறைப்படுத்தல், கட்டிட அமைப்பு, உயரம், கட்டுமானப் பரப்பு, வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஒழுங்குபடுத்தி, முறையான திட்டமிட்ட குடியிருப்புகள் அமைய உதவியாக இருக்கின்றன. சர்வதேச மற்றும் தேசிய அளவில் உள்ள நடைமுறைகளை கருத்தில் கொண்டும், சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களை கருத்தில் கொண்டும் இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வங்கி கடன் பெறுவது எளிது

குறிப்பாக, ஏழை மக்கள் தங்களுடைய சிறிய மனைகளில் தாங்கள் கட்ட நினைக்கும் கனவு இல்லங்களுக்கு, திட்ட அனுமதி பெறுவதற்கும் வங்கியிடமிரு ந்து வீட்டுவசதி கடன் பெறுவதற்கும் எற்ற வகையில் இந்த விதிகள் உள்ளன. மலைப்பகுதிகள் நீங்கலாக அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்பதுடன் மூன்று குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் மற்றும் 12 மீட்டர் உயரம் வரை உள்ள குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கு பணி நிறைவுச் சான்றிதழ் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கட்டிடங்கள் ஒப்புதல் அளித்த வரைபடத்தின்படி அமைத்துள்ளதை உறுதி செய்யும் வகையில், அஸ்திவாரம் மற்றும் கடைசி தள பணிகளின்போது தக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். கட்டிட அனுமதிக்கான கால அவகாசம் என்பது திட்ட அனுமதிக்கு ஏற்ப ஐந்து ஆண்டுகளாகவும், மேலும், 3 ஆண்டுகளுக்கு புதுப்பித்துக்கொள்ளவும் வழி செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோர்களுக்கு ஏற்ற சூழலை அமைக்கவும் தக்க விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மழை நீர் வடிகால் சேமிப்பு, சூரிய சக்தி பயன்பாடு, கண்காணிப்பு கேமராக்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றுக்கான விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். புதிய விதிகள் அனைத்தும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. ஏற்கனவே, அனுமதிக்காக விண்ணப்பித்தவர்கள் மனுக்கள் முந்தைய விதிகளின்படி பரிசீலிக்கப்படும். புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்கள் புதிய விதிகளின்படி ஆய்வு செய்யப்படும்.

மாநில நிலப் பயன்பாட்டு கொள்கை

மிகக் குறைவாக உள்ள நில ஆதாரங்களைத் திறம்பட பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும். நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில், திட்டமிடல் ஆகிய பணிகளை நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம் திறம்பட மேற்கொள்ள வேண்டிய நிலையில், மாநில நிலப் பயன்பாட்டு கொள்கை வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

Next Story