கட்டுமானப் பணிகளுக்கு ஏற்ற அதிநவீன தொழில்நுட்பங்கள்


கட்டுமானப் பணிகளுக்கு ஏற்ற அதிநவீன தொழில்நுட்பங்கள்
x
தினத்தந்தி 24 Aug 2019 9:35 AM GMT (Updated: 24 Aug 2019 9:35 AM GMT)

பல்வேறு உலக நாடுகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளில் ‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதர்கள் பயன்படுத்தப்படுவதை பலரும் அறிந்திருப்போம்.

இந்தியாவின் சில இடங்களிலும் அத்தகைய எந்திரங்கள் மூலம் வீடுகள் அமைக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் அஸ்திவாரத்துக்கான பள்ளம் எடுப்பதற்கு அதிக நாட்களும், மனித வளமும் தேவை என்ற நிலையில் பணிகளை விரைவாக செய்ய ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், பிரம்மாண்டமான வணிக வளாகங்கள் போன்றவற்றைக் கட்டமைக்கும் பணிகளிலும் ரோபோக்கள் பங்கு முக்கியமானதாக மாறி விட்டது.

கட்டளைகளை செயல்படுத்தும்

இன்றைய காலகட்ட நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளை கட்டுமானத்துறையினர் பயன்படுத்துவது அவசியமானதாகி விட்டது. செயற்கை நுண்ணறிவு (Artifitial Inteligence) மற்றும் இணைய வழித் தொடர்புகள் (Internet of Things) ஆகிய யுக்திகள் வளர்ந்த பல்வேறு உலக நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு என்பது பார்க்கும் திறன், பேச்சைப் புரிந்துகொள்வது, முடிவெடுக்கும் திறன் ஆகிய செயல்திறன்கள் கொண்ட எந்திர தொழில்நுட்பம் ஆகும். அவை, கட்டுமானப் பணி இடங்களிலிருந்து அளிக்கப்படும் கட்டளைகளை உள்வாங்கி, கண்ட்ரோல் ரூமுக்கு அனுப்பி, அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் பணிகளை கச்சிதமாக செய்கின்றன.

இணைப்பு தொழில்நுட்பம்

வீடுகள் அல்லது குடியிருப்புகளில் உள்ள செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ரோபோக்கள் வீட்டில் உள்ள விளக்குகள், மின்விசிறிகள், ஏ.சி ஆகியவற்றை தேவையான சமயத்தில் இயங்க வைக்கவோ அல்லது அதன் இயக்கத்தை நிறுத்தவோ செய்கின்றன. அதாவது, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ரோபோ ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணையத் தொடர்புகள் (Internet Of Things) என்ற டெக்னாலஜி மூலம் இணைக்கப்பட்டு செயல் படுகின்றன.

நடைமுறைக்கு ஏற்றவை

அதிநவீன தொழில்நுட்பம் (Cutting Edge) என்ற அணுகுமுறையின் மூலம் கட்டிடத்தின் வடிவமைப்பை மாற்றுவது மற்றும் அதன் வாழ்நாளை அதிகரிப்பது ஆகியவையும் இன்றைய நிலையில் சாத்தியமானதாக மாறி உள்ளது. அதாவது, சம தளமான மேற்கூரையில் பெய்யும் மழைநீர் தேங்கி நின்று, பின்னர் வெளியேறும் நிலையில் அது கட்டிடத்தை பாதிக்கச் செய்யலாம். அந்த நிலையில் மேற்கூரையை ‘கட்டிங் எட்ஜ்’ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைத்தால் கூரையில் மழை நீர் தேங்காமல் தடுக்கப்படுவதுடன், அதைப் பயன்படுத்தி செடி, கொடிகளை வளர்க்கும் மாடித்தோட்டம் அமைக்கவும் ‘கட்டிங் எட்ஜ் டெக்னாலஜி’ உதவுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கட்டுமானப் பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவு கருவியுடன் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா மூலம் பணிகளின்போது நடைபெறும் விதிமீறல்களைத் தொடக்கத்திலேயே கண்டுபிடிக்கலாம். மேலும், தானியங்கி அமைப்பு மூலம் அதற்கேற்ப தக்க உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியும். கட்டுமானப் பணியிடத்தில் ‘வெல்டிங் மிஷின்’, ‘வைப்ரேட்டர்’, மின்சாதனப் பொருட்கள் ஆகியவை பாதுகாப்பு விதிகள்படி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முன்னதாக பதிவு செய்து கொண்டால், அதற்கு மாறாக அவை செயல்படும் நிலையில் செயற்கை நுண்ணறிவு நினைவகத்தோடு தொடர்பு கொண்டு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடச் செய்ய இயலும்.

பணியிடப் பாதுகாப்பு அவசியம்

மேலும், கட்டிடத்தின் நீராற்றல் பணிகள் முறையாக நடைபெறுவதை புரிந்துகொண்டு தகவல் அனுப்பும். கட்டிட பணியிடத்தில் எங்காவது புகை வெளியேறும் நிலையில் அதன் வெப்ப நிலையை உணர்ந்து கொண்டு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பச்செய்யலாம். கட்டுமானப்பணிகளைச் செய்யும் பணியாளர்களின் கண்களை ‘ஸ்கேனிங்’ செய்து கருவியின் நினைவகத்தில் சேமித்து வைக்கப்படும்போது, வெளியாட்கள் நடமாட்டம் பற்றி சிஸ்டம் உடனுக்குடன் கண்ட்ரோல் அறைக்கு தகவல் அனுப்பி விடும். மேலை நாடுகளில் உயரமான அடுக்குமாடிகளின் கட்டுமானப் பணிகளைப் பாதுகாப்பாக செய்து முடிக்க இந்த தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது.

Next Story