‘தினத்தந்தி’ - வி.ஜி.என் இணைந்து வழங்கும் ரியல் எஸ்டேட் கண்காட்சி சென்னையில் இன்று தொடங்குகிறது


‘தினத்தந்தி’ - வி.ஜி.என் இணைந்து வழங்கும் ரியல் எஸ்டேட் கண்காட்சி சென்னையில் இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 28 Sep 2019 5:38 AM GMT (Updated: 28 Sep 2019 5:38 AM GMT)

‘தினத்தந்தி’ மற்றும் வி.ஜி.என் நிறுவனம் ஆகியோர் இணைந்து ‘உங்கள் முகவரி பிராபர்ட்டி பேர்-2019’ என்ற ரியல் எஸ்டேட் கண்காட்சியை நடத்துகிறார்கள்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நடக்க உள்ள இந்த கண்காட்சியில் ஏ.ஆர்.எஸ் 550டி இரும்பு கம்பி தயாரிப்பு நிறுவனம் உடன் இணைந்து பங்கேற்கிறது.

இந்த மாபெரும் ரியல் எஸ்டேட் கண்காட்சியில் ‘நோவா லைப் ஸ்பேசஸ்’ மற்றும் ‘காசாகிராண்ட்’ ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து பங்கேற்கிறார்கள். கண்காட்சியில் இந்தியன் வங்கி பங்கேற்று வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன், வீட்டு மனைக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் மற்றும் இதர வங்கி சார்ந்த தகவல்களை அளிக்க இருக்கிறார்கள். மேலும், ஸ்டேட் பேங்க், யூகோ வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளும் பங்கேற்கிறார்கள்.

பங்குபெறும் கட்டுமான நிறுவனங்கள்

இந்த ரியல் எஸ்டேட் கண்காட்சியில் பாஷ்யம், தோஷி ஹவுஸிங், வி.ஜி.பி ஹவுஸிங், ஜெயின் ஹவுஸிங், இஷா ஹோம்ஸ், நவின், ரூபி, எல் அன்டு டி பிரஞ்யா, டி.வி.எஸ் எமரால்டு, கே.ஜி பில்டர்ஸ், மெட்ராஸ் சிட்டி பிராப்பர்டீஸ், பிரிமியர் ஹவுஸிங் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. அவர்கள் மூலம் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் 200-க்கும் மேற்பட்ட புதிய குடியிருப்பு திட்டங்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்குக் கடற்கரை சாலை, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், ஆவடி, அம்பத்தூர், செங்குன்றம், வேளச்சேரி, போரூர், மேடவாக்கம், திருவேற்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட சென்னையின் சுற்று வட்டார பகுதிகளில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வீட்டு மனைகள் ஆகியவை பற்றி அனைத்து தகவல்களையும் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தினர் அளிக்க இருக்கிறார்கள்.

வரிச்சலுகைகள்

‘அனைவருக்கும் வீடு-2022’ என்ற அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் பெற்று முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு ரூ.2.75 லட்சம் வரை சலுகை அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.45 லட்சத்திற்குள் முதன்முறையாக வீடு வாங்கும் தனி நபருக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை ரூ.ஒன்றரை லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.45 லட்சத்துக்கும் குறைவான மதிப்புள்ள வீடுகளை 15 ஆண்டு கால கடன் தவணையில் வாங்கும்போது கிட்டத்தட்ட ரூ. 7 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படும். வங்கியில் வீட்டு கடன் பெற்றவர்களுக்கு ஏற்கனவே அளிக்கப்படும் வரி விலக்கில், கூடுதலாக ரூ.ஒன்றரை லட்சம் சலுகை வழங்கப்படுவதுடன், மலிவு விலை வீடு வாங்குபவர்களுக்கு, கூடுதலாக ரூ.ஒன்றரை லட்சம் வரிச்சலுகையும் அளிக்கப்படும். இந்த சலுகைகள் 2020-ம் ஆண்டு வரை வீடு வாங்குபவர்களுக்கு வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கி கடன் வசதிகள்

கண்காட்சியில் கலந்து கொள்பவர்கள் அரசின் திட்டங்களுக்கேற்பவும், தங்களது பட்ஜெட்டிற்கேற்பவும் அமைந்துள்ள வீட்டுமனைத் திட்டங்கள் மற்றும் கட்டுமான திட்டங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டு பயன்பெறலாம். அடுக்குமாடி வீடு, தனி வீடு, வீட்டுமனை மற்றும் நிலம் ஆகியவற்றை வாங்க விரும்புபவர்களுக்கு இந்த கண்காட்சியில் உடனடி வங்கிக் கடன் வசதி அளிக்கப்படுகிறது. மேலும், வீட்டுக்கடன் மற்றும் வீட்டு மனைக்கடன் உள்ளிட்ட வங்கிக் கடன்களைப் பெறுவதற்கான வழிமுறைகளையும் தெரிந்து கொள்ளலாம். சொந்தமாக வீடு அல்லது மனை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த கண்காட்சி நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

இன்றும், நாளையும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

Next Story