வல்லுனர் கருத்து - கட்டிடங்களுக்கான ஆயுள் வரையறை


வல்லுனர் கருத்து - கட்டிடங்களுக்கான ஆயுள் வரையறை
x
தினத்தந்தி 1 Feb 2020 10:15 AM GMT (Updated: 1 Feb 2020 10:15 AM GMT)

அனைத்து கட்டிடங்களுக்கும் 50 ஆண்டுகள் ஆயுள் என்று பொதுவாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

பார்ட்மெண்டு, தனி வீடு மற்றும் வர்த்தக நிறுவன கட்டுமானங்கள் போன்ற ‘ரீ-இன்போர்ஸ்டு கான்கிரீட்’ அமைப்பாக உருவாக்கப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் 50 ஆண்டுகள் ஆயுள் என்று பொதுவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய பொதுப்பணித்துறை வழிகாட்டு நெறிமுறைகளில் ‘ஆர்.சி.சி’ அமைப்பிலான கட்டிடங்களுக்கு இந்த வரையறை அளிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு கட்டிடமும் அதன் கட்டுமான முறைகளில் தவறு அல்லது பழுது ஏற்படும்போதுதான் பாதிப்புக்கு உள்ளாகிறது.

கட்டிடங்களின் ‘பீம்’ மற்றும் ‘காலம்’ ஆகியவை சுவர் கட்டமைப்புடன் இணையும் ‘ஜங்சன்’ பகுதிகளில் அமைக்கப்படும் ‘ஜாயிண்டு ரிங்’ குறுக்களவு 10 எம்.எம் மற்றும் அதற்கும் அதிகமான குறுக்களவு கொண்டதாக இருப்பதே பாதுகாப்பானது. அதன் மூலம் ‘ஜாயிண்ட் ஜங்ஷன்’ வலுவானதாக அமையும். குறைந்த குறுக்களவு கொண்ட கம்பிகளை பயன்படுத்துவதால், கட்டிடத்தின் உறுதி சரியான அளவீட்டில் இருக்காது. அதனால் கட்டிடத்தின் நீடிப்பு தன்மை குறைந்து விடக்கூடும். மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் என்பது கட்டுமானப் பொருட்களின் தரத்தைப் பொறுத்தே அமைகிறது. அதனால், கட்டுமானப் பணிகளின்போது கான்கிரீட்டை சரியான விகிதத்தில் கலப்பதுடன், அதை நன்றாக ‘வைப்ரேட்’ செய்வதும் அவசியம்.

சரியாக ‘வைப்ரேஷன்’ செய்யாத நிலையில், சம்பந்தப்பட்ட கட்டுமானத்தில் துரு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு விடலாம். அதனால், காற்றில் உள்ள ஆக்சிஜன் அதற்குள் சென்று, கட்டுமானத்தில் உள்ள கம்பிகளுடன் சேர்ந்து, அரிப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு ஏற்படும் அரிமானம் காரணமாக இரும்பு கம்பிகள் அதன் இயல்பான வடிவத்திலிருந்து கிட்டத்தட்ட ஏழு மடங்கு பெரிதாக மாற்றம் அடைந்து விடுகின்றன. அதனால், கட்டிடம் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவடைய ஆரம்பித்து விடும். அதன் பின்னர், 5 ஆண்டுகளில் அந்த கட்டிடத்தில் விரிசல்கள் உருவாகும். 10 ஆண்டுகளில் கட்டிடம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு விடும்.

-முனைவர் டி.எஸ். தாண்டவமூர்த்தி, கட்டிட பொறியியல் பேராசிரியர்

Next Story