ரியல் எஸ்டேட் துறையில் அதிகரித்து வரும் அன்னிய முதலீடு


ரியல்  எஸ்டேட் துறையில்  அதிகரித்து  வரும்  அன்னிய  முதலீடு
x
தினத்தந்தி 7 Feb 2020 11:30 PM GMT (Updated: 7 Feb 2020 2:35 PM GMT)

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் பெறப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் கடந்த 2019–ம் ஆண்டில் ஒட்டு மொத்தமாக 8.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ந்திய ரியல் எஸ்டேட் துறையில் பெறப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் கடந்த 2019–ம் ஆண்டில் ஒட்டு மொத்தமாக 8.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது ரூ.43,780 கோடி முதலீடு என்ற நிலையில் கடந்த 2018–ம் ஆண்டை விட இது அதிகமாகும். 2019–ம் ஆண்டில் பெறப்பட்ட மொத்த முதலீடுகளில் சுமார் 78 சதவிகிதம் வெளிநாட்டு நிதி என்ற அளவில் அந்த ஆண்டின் மிக உயர்ந்த பங்கு என்றும் சர்வதேச ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான ‘கோலியர்ஸ்’ (Colliers International)  குறிப்பிட்டுள்ளது. அது பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

குறிப்பாக, அலுவலக ரீதியான சொத்துக்கள் (Commercial Office 
Sector) முதலீட்டின் மொத்த வருவாயில் 46 சதவிகிதம் அதிகரித்து, ரூ.20,000 கோடி என்ற அளவில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த துறையில் ஏற்பட்டுள்ள தேவைகள் மற்றும் வாடகை நிலவரம் ஆகிய காரணிகள் என்றும் கூறப்படுகிறது.    

முதலீட்டாளர்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கும் தகவல் தொழில்நுட்ப சந்தையின் முக்கிய இடங்களான பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே போன்ற இடங்களில் ‘கமர்ஷியல் ஆபீஸ் செக்டார்’ முதலீடுகள் அதிகமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு வர்த்தக ரீதியான அலுவலக சந்தைக்கு வலுவான தேவை ஏற்படக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால், நடப்பு ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் வணிக ரீதியான முதலீடுகள் இன்னும் கூடுதல் ஆகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த 2010–14 மற்றும் 2015–19 ஆகிய இரு ஐந்தாண்டு காலகட்டங்களை ஒப்பிடும்போது இந்திய அளவில் பெறப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளை தென்னக நகரங்களே அதிகமாக ஈர்த்துள்ளன. அதாவது, ஹைதராபாத் நகரம் சுமார் 424 சதவிகிதம் அதிக முதலீட்டை பெற்றுள்ளது. சென்னை 105 சதவிகிதமும், பெங்களூரு 42 சதவிகிதமும் முதலீடுகளை பெற்றுள்ளன.   

இந்திய அளவிலான குடியிருப்பு துறை (Residential sector) நீண்ட காலமாக மந்த நிலையில் இருந்து வருகிறது. அதாவது, கடந்த 2019–ம் ஆண்டில் இந்த பிரிவில் பெறப்பட்ட மொத்த முதலீடுகளில் 9 சதவிகிதம் மட்டுமே அன்னிய முதலீடாக கிடைத்துள்ளது. இருப்பினும், ரியல் எஸ்டேட் துறையில் வருங்காலங்களில் பெறப்படும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில் 2021–ம் ஆண்டில் சுமார் ரூ.49 ஆயிரம் கோடி அளவிலான முதலீடுகள் கிடைக்கலாம் என்று ‘கோலியர்ஸ்’ நிறுவனம் கணித்துள்ளது.

Next Story