வாடகை ஒப்பந்தம்-சில முக்கிய விதிகள்


வாடகை ஒப்பந்தம்-சில முக்கிய விதிகள்
x
தினத்தந்தி 23 Jan 2021 10:30 PM GMT (Updated: 23 Jan 2021 6:10 PM GMT)

வீட்டினை உரிமையாளர் வாடகை மற்றும் குத்தகை விடும்போதும், வாடகைக்காக (அ) குத்தகையாக வீட்டை (அ) அலுவலகத்தை நாம் எடுக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விதிகளை நாம் இக்கட்டுரையில் காண்போம்.

வாடகைக்காக விடப்படும் வீட்டின் சரியான முகவரி, வீட்டின் அமைப்பு பற்றிய விவரம், எத்தனை சதுர அடியில் வீடு அமைந்துள்ளது வீட்டில் பொறுத்தப்பட்டுள்ள உபகரணங்கள் போன்றவை அனைத் தையும் வாடகை (அ) குத்தகை ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடபட வேண்டும்.

வாடகை எடுப்பவர்களின் பெயர் மற்றும் அவரின் ஆதார் அல்லது அரசின் அடையாள அட்டை ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும். அதேபோன்று வாடகை விடுபவர் உரிமையாளரா? அல்லது உரிமையாளர் இடம் இருந்து பவர் ஆப் அட்டார்னி பத்திரம் மூலம் வாடகை விடுவதற்கான அதிகாரம் பெற்றவரா என்பதை குறிப்பிட வேண்டும்.

மாத வாடகை எவ்வளவு? முன்பணம் எவ்வளவு செலுத்தப்படுகின்றது என்பதையும் (அ) குத்தகை தொகை எவ்வளவு? மாத வாடகை என்பது இல்லை என்றால் அதை பற்றியும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

வீட்டை வாடகை விடும்போது வீடு எந்த நிலையில் உள்ளதோ, அவ்வாரே இருக்க வேண்டும். வீட்டின் அமைப்பில் எந்த மாறுதலையும் ஏற்படுத்த கூடாது. அவ்வாறு ஏற்படுத்த வேண்டும் என்றால் உரிமையாளர் சம்மதம் பெற்ற பின்னரே அதை செய்ய வேண்டும் எனவும், வீட்டை காலி செய்யும்போது போதுமான மராமத்து வேலைகளை செய்து வீட்டை சரியான நிலையில் ஒப்படைக்க வேண்டியது. இல்லை எனில் மராமத்து வேலைகளுக்கு ஆகும் செலவை வாடகை எடுப்பவர் செலுத்திய முன்பணத்தில் வாடகை விட்டவர் கழித்து கொள்ளலாம் என்பதை ஒப்பந்தத்திலேயே சொல்லிவிடுவது நல்லது.

எவ்வளவு காலம் இந்த வாடகை (அ) குத்தகை ஒப்பந்தம்? முடியும்போது ஒப்பந்தம் தொடர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டால்்; பரஸ்பர விருப்பம் மூலம் நீடித்து கொள்வது பற்றியும், அல்லது ஒப்பந்தம் உள்ள கால கட்டத்திலேயே ஒப்பந்தத்தை முறிவு செய்ய வேண்டும் என்றால் இருவருக்கும் உள்ள உரிமைகள் என்ன? என்பன பற்றியும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டால் பின்னர் தேவையற்ற வழக்குகள் வேண்டி இருக்காது.

வீட்டிற்கான, மின்சார கட்டணம், குடிநீர், கழிவுநீர் வரி கட்டணம், வாடகை விடப்படும் இடம் சொத்து வரி விதிப்பில் ‘வணிக இடமாக’ குறிப்பிடப்பட்டு அதற்குண்டான வரி விதிக்கும் பட்சத்தில் அதை யார் கட்டுவது போன்றவற்றையும் வாடகை விடுபவரும், வாடகை எடுப்பவரும் தெளிவாக பேசி அதை ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும்.

வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வது அவசியம். அவ்வாறு பதிவு செய்யும்போது மட்டுமே ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் சட்ட ரீதியான தீர்வுகளை விரைந்து எடுக்க உதவியாக இருக்கும்.

வாடகை ஒப்பந்தம், என்பது வாடகை எடுப்பவருக்கு பல்வேறு விசயங்களுக்கு தேவைப்படும் என்பதால் இந்த ஆவணம் மிக முக்கியமான ஒன்றாகும்.

Next Story