பசுமை கட்டுமான தொழில்நுட்பமும், சிக்கன செலவும்...


பசுமை கட்டுமான தொழில்நுட்பமும், சிக்கன செலவும்...
x

கட்டுமான பணிகளை மேற்கொள்ளும்போது, பசுமை கட்டமைப்புகளாக அமைக்க வேண்டியதன் அவசியத்தை பல்வேறு தனியார் மற்றும் அரசு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

பல்வேறு நாகரிக வளர்ச்சிகள் காரணமாக உலக அளவில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள் இயற்கை வளங்களை பாதித்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதன் விளவாக இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய நிலை இன்று எழுந்துள்ளது.

பசுமை கட்டமைப்புகள் அல்லது வீடுகள் பற்றி சி.ஐ.ஐ (Confederation of Indian Industry -CII) என்ற அமைப்பு பசுமை வீடுகள் அமைப்பதில் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்குகிறது. அதன் மூலம் இயற்கையை பாதுகாப்பது அதன் நோக்கமாகும். பசுமை கட்டமைப்பு என்ற நடைமுறையானது வீடுகளுக்கு மட்டுமல்லாமல் வணிக வளாகங்கள், ஐ.டி பார்க்குகள், அரசு கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டமைப்புகள் என்ற பல்வேறு கட்டுமான அமைப்புகளுக்கும் பொருந்தக்கூடியது என்று சி.ஐ.ஐ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறைந்த அளவு நிலம், குறைந்த அளவு தண்ணீர், போதிய அளவு இயற்கை வெளிச்சம் போன்ற அமைப்புகள் உள்ள மாதிரி வீடுகள் அந்த அமைப்பினரால் கட்டப்பட்டு வழிகாட்டப்படுகிறது. அவை பசுமை கட்டமைப்புகள் என்று குறிப்பிடப்படுகின்றன.

முதலில் ஒரு கட்டமைப்பு அமையும் இடத்தை கச்சிதமாக தேர்வு செய்வது முக்கியம். குறிப்பாக, மேற்கண்ட இடத்தில் உள்ள மண் வளம் காப்பது, வீட்டில் பயன்படும் நீரை மறுசுழற்சி செய்து செடி, கொடிகள் உள்ளிட்ட இதர தேவைகளுக்கு பயன்படுத்துவது, மின்சார உபயோகத்தை குறைப்பது போன்ற விஷயங்களை வீடு கட்டும் முன்னர் திட்டமிட்டு செயல்படுத்தும் முறை பசுமை கட்டமைப்புக்கான அடிப்படையாகும்.

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களையும் பசுமை குடியிருப்பாக மாற்றியமைக்கவும் இயலும். அதற்கேற்ற வழிவகைகளையும் சி.ஐ.ஐ அமைப்பினர் அளித்து வருகின்றனர். அந்த அமைப்பினர் அனைத்து வகையான கட்டுமான அமைப்புகளையும் அவற்றின் நிலைக்கேற்ப ரேட்டிங் மதிப்பீடு தருகிறது. கட்டமைப்புகளுக்கு ஏற்ற வகையில் எட்டு வகையான மதிப்பீடுகள் அவர்களால் தரப்படுகிறது.

பழைய கட்டிடங்களை இடித்து, கிடைக்கும் பொருட்களை, தக்க முறையில் புதிய கட்டிடத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். அதன் மூலம், புதியதாக இயற்கை வளம் பயன்படுத்துவது குறைகிறது. அந்த வழியில் இயற்கை வளங்களைப் பாதுகாக்கலாம் என்பது பசுமை விதிகளில் ஒன்றாகும்.

மேலும், கட்டுமான பணிகளில் பல்வேறு துணைப்பொருட்கள் பயன்பாடு பற்றியும், வழிகாட்டுதல்களையும் எளிதாக பெற அவர்களிடமிருந்து பெற இயலும். புதிதாக வீடு கட்டுபவர்கள் மேற்கண்ட பசுமை வீடு அடிப்படையின் கீழ் அவற்றையும் பின்பற்றுவது பல்வேறு இயற்கை வளங்களை பாதுகாக்கும் விதமாகவும், எதிர்கால நலன்களுக்கு உகந்ததாகவும் இருக்கும்.


Next Story