பெருகி வரும் சிவப்புக்கல் வீடுகள்


பெருகி வரும் சிவப்புக்கல் வீடுகள்
x

செங்கல் சிவப்பாக இருக்கிறது,இது தவிர வேறு என்ன சிவப்புக்கல்? என்ற கேள்வி நம்முள் எழத்தான் செய்கிறது..

காலப்போக்கில், மணலில் உள்ள சிறிய அளவிலான இரும்புச்சத்து நிறைந்த தாதுக்கள் உடைந்து, இரும்பு ஹேமடைட் படிகங்களாக ஆக்சிஜனேற்றப்பட்டு குவார்ட்ஸ் மணல் துகள்களில் மிக மெல்லிய வண்ணப்பூச்சு போன்ற பூச்சுகளாக உருவாகின்றன. ஹேமடைட் படிகங்கள் சிவப்பு நிறத்தைத் தவிர அனைத்து மென்மையான வண்ணங்களையும் உறிஞ்சி, பிரதிபலிக்கின்றன. இவ்வாறு பிரதிபலிக்கும் போது அவை மணற்கற்களுக்கு அவற்றின் சிவப்பு நிறத்தை அளிக்கிறது.

ஜெய்ப்பூரில் இருக்கும் ஹவா மஹால் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணக் கற்களால் கட்டப்பட்ட அழகிய கட்டிடம் ஆகும்.பழங்காலத்துக் கோவில்களும் இந்த சிவப்பு கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன.பழங்காலம் தொட்டே சிவப்புக் கற்களால் கட்டப்பட்ட கோவில்கள், சிறிய அரண்மனைகள் மற்றும் பெரிய வீடுகள் போன்றவை நம் நாட்டில் இருந்திருக்கின்றன.இப்பொழுது மறுபடியும் சிவப்பு கற்களைக் கொண்டு வீடுகளைக் கட்டுவது பிரபலமாகி வருகின்றது.. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் இந்த கற்களை கொண்டு கட்டப்படும் வீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன..

சாதாரண கற்களைக் கொண்டு கட்டும் வீடுகளை விட இவை அதிக ஆண்டுகள் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. மேலும்., சாதாரண கற்களால் கட்டப்படும் வீடுகளுக்கு ஆகும் செலவைவிட இந்த சிவப்பு கற்களைக் கொண்டு கட்டப்படும் வீடுகளுக்கு மிகக் குறைந்த செலவே ஆகிறது.சிக்கனமாக வீடுகட்ட விரும்புவர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக இந்த கற்கள் இருக்கும்.

அகலமான சுவர்களை கடக்கால்களாக அமைத்து அதன்மேல் சாதாரண சுவர்கள் கட்டப்படுகின்றன. அதேபோல் தளம் அமைக்கும் பொழுது சுவர்களின் மேற்புறத்தில் மரக்கட்டைகள் அல்லது இரும்பு பீம்களை குறிப்பிட்ட இடைவெளியில் பொருத்துகிறார்கள். அதற்குமேல் சிவப்புக் கற்களால் ஆன ஸ்லாப்களை பொருத்துகிறார்கள்.

இந்த ஸ்லாப்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை சிமெண்ட் கலவை அல்லது சுண்ணாம்புக் கலவையை வைத்து பூசுகிறார்கள். இதன்பிறகு, செங்கல்களைக் கொண்டு அரை அடி உயரத்திற்கு சுவர்களை எழுப்பி இப்பொழுது சிவப்புக்கல் ஸ்லாப்களுக்கு மேலே மண்ணை பரப்புகிறார்கள். அதற்குமேல் நீர் புகாத பிளாஸ்டிக் ஷீட்டுகளை விரித்து அதற்கும் மேலே மண்ணை பரப்பி தண்ணீர் தெளித்து காய்ந்த பின்னர் அதன்மேல் செங்கற்களை அடுக்கி அதற்கும் மேலே சிமெண்ட் கலவையை போட்டு நன்றாக பரப்பி விடுகிறார்கள். இவ்வாறு தளம் அமைக்கப்பட்ட வீடுகள் அதிக ஆயுள் கொண்டவையாக இருக்கின்றன.

குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்ட நினைப்பவர்களுக்கு மிகச் சரியான தேர்வாக இவ்வகை சிவப்புக் கல் வீடுகள் இருக்கின்றன. இந்த வீடுகளை கட்டுவதற்கு அதிக அளவில் பொருட்செலவு ஆவதில்லை.. அதேபோல் மிகக் குறுகிய காலத்தில் இந்த வீடுகளைக் கட்டி முடித்து விட முடியும். குறைந்த நபர்களைக் கொண்டு இந்த வீட்டை கட்டி முடித்து விட முடியும் என்பது மற்றொரு சிறப்பாகும்.கோடைக்காலத்தில் இந்த சிவப்புக் கல் வீடுகள் வீட்டிற்குள் வெப்பத்தை கிரகிக்காமல் வீட்டை குளுமையாக வைத்திருக்கின்றன.

வட இந்தியாவில் பிரபலமான இவ்வகை வீடுகள் இப்பொழுது தமிழ்நாட்டிலும் மக்களிடையே பிரபலமாகி வருகின்றது. பழங்காலத்தில் மக்களிடையே புழக்கத்தில் இருந்த இவ்வகை வீடுகள் நாகரிக வளர்ச்சியின் காரணமாக மறைந்து போய் இப்பொழுது மறுபடியும் மக்களிடையே பிரபலமடைந்து கொண்டிருக்கின்றது.


Next Story