கட்டுமான முறைகளில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்


கட்டுமான முறைகளில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்
x

நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 35 சதவிகிதம் நகரங்களில் வசித்து வரும் நிலையில் அதன் எண்ணிக்கை மேலும் அதிகமாக ஆகலாம் என்ற சூழல் உள்ளது. இன்றைய காலகட்டத்தில் நகர்ப்பகுதிகளில் கிட்டத்தட்ட 2.5 கோடி குடியிருப்புகளுக்கான தேவை உள்ளதாக ரியல் எஸ்டேட் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள குடும்பங்கள் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கும் வீடுகள் அல்லது குடியிருப்புகள் இன்றைய பொருளாதார சூழலில் அவசியம் என்று ரியல் எஸ்டேட் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மேலை நாடுகள் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குடியிருப்புகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்திருக்கின்றன. அதாவது, வீடுகள் கட்டமைப்பு என்ற செயல்பாட்டை தொழிற்சாலை சார்ந்த உற்பத்தியாக மாற்றியமைத்து பிரச்சினை எளிதாக சமாளிக்கப்பட்டது.

அஸ்திவாரம் தவிர்த்து, ஒட்டு மொத்த வீட்டின் பாகங்களை தொழிற்சாலைகளில் ரெடிமேடாக தயாரித்து, எடுத்து வந்து குறிப்பிட்ட இடத்தில் அவற்றை இணைத்து கட்டமைப்பாக அமைத்துக்கொள்வதாகும். வீடு என்பது தனிப்பட்ட கட்டுமானம் என்ற நிலையை தாண்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியத்துவம் பெற்ற அமைப்பு என்ற நிலையில் மேற்கண்ட முறையை சூழலியல் நிபுணர்கள் வரவேற்றுள்ளார்கள்.

இந்திய அளவில் மாற்று முறை கட்டுமான நுட்பம் என்பது இன்னமும் பரிசோதனை அளவில்தான் உள்ளது. கட்டுமான தொழில் நுட்ப மேம்பாட்டுக்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட கட்டுமான பொருட்கள் மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டு கவுன்சில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் பற்றி வழிகாட்டுதல்களை வழங்கினாலும், பழைய முறைகள்தான் இன்னமும் கட்டுமானத்துறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

வளர்ந்த நாடுகள் குடியிருப்புகளை விரைவாக அமைக்க வேண்டிய நிலையில், அவற்றை தொழிற்சாலை சார்ந்த உற்பத்தியாக மாற்றி விட்டன. அத்தகைய மாற்று முறை கட்டுமான யுக்திகளில் சிலவற்றை இங்கே காணலாம்.

மாடுலர் ஹோம் முறையின்படி, தொழிற்சாலைகளில் வீடுகளின் பல்வேறு பாகங்களை தயாரித்து, எடுத்து வரப்பட்டு மனையில் உள்ள அஸ்திவார அமைப்பில் பொருத்தப்படுகின்றன. சுவர்கள், தரை அமைப்பு, கூரைகள், படிக்கட்டுகள் என்று கிட்டத்தட்ட 90 சதவிகித பணிகள் தொழிற்சாலையில் வடிவமைக்கப்படுவதால், ஒரே நாளில்கூட ஒரு வீட்டை அமைத்துவிட இயலும். அதனால், காலம் மற்றும் பட்ஜெட் ஆகியவை பெருமளவு குறைவது கவனிக்கத்தக்கது.

பேனலைஸ்டு ஹோம் முறையில் நீடித்து உழைக்கும் வீடுகளை தொழிற்சாலையில் கட்டமைக்கும் இந்த உயர் தொழில் நுட்பம் மூலம் வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப அனைத்து பாகங்களையும் கணக்கிட்டு வடிவமைக்க இயலும். கணிப்பொறி மூலம் சுவர்கள், கூரைப்பகுதிகள் மற்றும் இதர பாகங்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, ஓரிரு நாட்களில் வீடு உருவாகிறது. இவ்வகை வீடுகள் இயற்கை பாதிப்புகளை எதிர்த்து நிற்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக அறியப்பட்டுள்ளதால், பசுமை கட்டிடமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

லாக் ஹோம் என்பது மர வீடாகும். மரங்கள் என்பவை புதுப்பிக்கக்கூடிய மூலப்பொருளாக உள்ளது. குறிப்பாக மூங்கில் போன்ற மரங்களை வணிக ரீதியாக பயன்படுத்த இயலும். இந்த முறைப்படி வர்த்தக ரீதியாக மரங்கள் உற்பத்தி சுற்று சூழலுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, மரங்கள் சீதோஷ்ண நிலைக்கு உகந்ததாக இருப்பதால், மரத்தை மூலப்பொருளாக கொண்ட வீடுகள் பசுமை வீடுகளாக சொல்லப்படுகின்றன.

கான்கிரீவால் என்பது ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக உள்ளது. சமீபத்தில் இந்த முறை நமது பகுதிகளில் அறிமுகமாகி உள்ளது. இந்த கட்டுமான அமைப்பில் ஒன்றுக்குள் ஒன்றை பொருத்தக்கூடிய மாடுலர் முறைப்படி அமைந்த பாலிஸ்டைரீன் பேனல் அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

புதிய தொழில்நுட்பங்களின் நன்மைகள்

* கட்டுமான பணி எளிமையாக இருப்பதோடு, மூலப்பொருட்கள் வீணாவதும் தவிர்க்கப்படுகிறது.

* தொழிற்சாலை உற்பத்தி என்ற நிலையில் கட்டுமான பணிகளுக்கான வேகம் அதிகமாகும்.

* கட்டுமானத்திற்கான நேரம் மற்றும் பட்ஜெட் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவு குறைகின்றன.

* கட்டிட அமைப்பின் தரம் எவ்வாறு உள்ளது என்று சுலபமாக கவனிக்க முடியும்.

* இந்த முறைப்படி மத்திய தர மக்களும் வாங்கக்கூடிய விலையில் வீடுகளை கட்டமைக்க முடியும்.


Next Story