100-வது ஐ.பி.எல் போட்டியில் சதம்...ஆட்ட நாயகன் பட்லர் கூறியது என்ன..?


100-வது ஐ.பி.எல் போட்டியில் சதம்...ஆட்ட நாயகன் பட்லர் கூறியது என்ன..?
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 7 April 2024 1:39 AM GMT (Updated: 7 April 2024 8:08 AM GMT)

ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

ஜெய்ப்பூர்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் விராட் கோலி 72 பந்தில் 113 ரன்கள் அடித்தார். இதையடுத்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 189 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய பட்லர் 58 பந்தில் 100 ரன்னும், சஞ்சு சாம்சன் 42 பந்தில் 69 ரன்னும் எடுத்தனர். ஆர்.சி.பிக்கு எதிராக பட்லர் நேற்று அடித்த சதத்தின் மூலம் ஐ.பி.எல் தொடரில் தன்னுடைய 100-வது போட்டியில் சதமடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. இதையடுத்து இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி சதம் அடித்த ஜோஸ் பட்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதன் பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, அதை நான் சரியாக டைமிங் செய்யவில்லை. இருப்பினும் பந்து பவுண்டரி எல்லையை தாண்டிச் செல்லும் அளவுக்கு அதிர்ஷ்டம் இருந்தது.

அதனால் கிடைத்த வெற்றியால் மகிழ்ச்சி. நீங்கள் எவ்வளவு காலம் விளையாட்டை விளையாடியிருந்தாலும் உங்களுக்கு அழுத்தங்கள் இருக்கும். அப்போது மனதை சக்தி வாய்ந்ததாக வைத்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. ஒரு கட்டத்தில் அது சரியாக விடும். சில சமயங்களில் அது சரியாகி விடும் என்று நீங்களே சொல்ல வேண்டும். சென்ற போட்டியில் வெறும் 13 ரன் மட்டுமே அடித்தாலும் நான் நன்றாக உணர்ந்தேன்.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் எனக்கு நல்ல தொடர் அமைந்தது. அதை இங்கே காட்ட ஒரு இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டது என்பதை உணர்ந்தேன். இந்த வருடத்தைப் போலவே கடந்த 3 சீசன்களாக நாங்கள் நல்ல துவக்கத்தை பெற்றுள்ளோம். ஆனால் அதைத் தொடர கடினமாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story