ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி இதுவரை சாதித்தது என்ன?


ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி இதுவரை சாதித்தது என்ன?
x
தினத்தந்தி 2 Dec 2018 11:30 PM GMT (Updated: 2 Dec 2018 9:56 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணித்து இருப்பது இது 12-வது முறையாகும். இதுவரை ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்த முறையாவது இந்திய அணி தொடரை வென்று சரித்திரம் படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை சாதித்தது என்ன? என்பதை இங்கு பார்ப்போம்.

இது தான் இந்திய அணியின் முதல் ஆஸ்திரேலிய பயணம். இந்திய அணிக்கு லாலா அமர்நாத்தும், ஆஸ்திரேலிய அணிக்கு டான் பிராட்மேனும் கேப்டனாக இருந்தனர். பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இரண்டு இன்னிங்சிலும் (58 மற்றும் 98 ரன்) மூன்று இலக்கத்தை கூட தொட முடியாமல் படுதோல்வி அடைந்தது. மழையால் பாதிக்கப்பட்ட 2-வது டெஸ்ட் (டிரா ஆனது) தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்தியாவுக்கு தோல்வியே மிஞ்சியது. ஆஸ்திரேலிய மண்ணில் சதம் கண்ட முதல் இந்தியர் என்ற சிறப்பை ஆல்-ரவுண்டர் வினோ மன்கட் பெற்றார். இந்த தொடரில் பிராட்மேன் மொத்தம் 715 ரன்கள் குவித்தார்.

சிட்னியில் நடந்த 2-வது டெஸ்டின் போது இந்திய வீரர் வினோ மன்கட் எதிர்பாராத சர்ச்சையில் சிக்கினார். ஆஸ்திரேலிய பேட்டிங்கின் போது எதிர்முனையில் நின்ற பில்லி பிரவுன், பந்து வீசப்படுவதற்கு முன்பே கிரீசை விட்டு நகர்ந்து செல்வதை கவனித்த மன்கட், பந்து வீசுவது போல் ஓடி வந்து திடீரென ஸ்டம்பு மீது இருந்த பெய்ல்சை தட்டிவிட்டு ரன்-அவுட் கேட்டு அப்பீல் செய்தார். அந்த சமயம் பில்லி பிரவுன் கிரீசை விட்டு வெளியே நின்றதால், ரன்-அவுட் வழங்கப்பட்டது. இது உண்மையான விளையாட்டு வீரர்களுக்கு அழகல்ல என்று அங்குள்ள ஊடகங்கள் குறைகூறின. அதே சமயம் பிராட்மேன் உள்ளிட்டோர் மன்கட்டின் செயலை ஆதரித்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகே இந்த மாதிரியான ரன்-அவுட்டுக்கு ‘மன்கடட்’ என்று அழைக்கப்படுகிறது.

நவாப் பட்டோடி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்டுகளிலும் தோல்வி அடைந்தது. பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்டில் மட்டும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு தென்பட்டது. இதில் 395 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 355 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

பிஷன்சிங் பெடி தலைமையிலான இந்திய அணியில் கவாஸ்கர், வெங்சர்க்கார், குண்டப்பா விஸ்வநாத், மொகிந்தர் அமர்நாத் என தலைச்சிறந்த வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். முதல் இரு டெஸ்டுகளில் முறையே 16 ரன் மற்றும் 2 விக்கெட் என்று நூலிழை வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்டில் ‘செக்’ வைத்தது. இதில் 222 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடிய இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதலாவது வெற்றியை பதிவு செய்தது. சுழற்பந்து வீச்சாளர் பக்வத் சந்திரசேகர் இரண்டு இன்னிங்சிலும் தலா 6 விக்கெட் வீதம் வீழ்த்தி பிரமிக்க வைத்தார். சிட்னியில் நடந்த அடுத்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது. இதனால் தொடர் யாருக்கு என்ற எதிர்பார்ப்பை உருவாக்கிய கடைசி டெஸ்டில் இந்திய அணி 495 ரன்கள் இலக்கை நெருங்கி வந்து (445 ரன்னில் ஆல்-அவுட்) பணிந்தது. இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு கடுமையான சவால் கொடுத்த தொடராக இது அமைந்தது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய படை, முதல் டெஸ்டில் தோற்றாலும் மெல்போர்னில் நடந்த கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை இழக்காமல் தப்பித்தது. இதன் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை இந்திய பவுலர்கள் வெறும் 83 ரன்னில் சுருட்டி வீசினர். இந்த நாள் வரைக்கும் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் மோசமான ஸ்கோராக நீடிக்கிறது. 2-வது டெஸ்ட் டிரா ஆனது.

கபில்தேவ் தலைமையில் அடியெடுத்து வைத்த இந்திய அணி மூன்று டெஸ்டிலும் டிரா கண்டது. இதில் சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்ததும், டாப்-3 பேட்ஸ்மேன்களான கவாஸ்கர் (172 ரன்), ஸ்ரீகாந்த் (116 ரன்), மொகிந்தர் அமர்நாத் (138 ரன்) ஆகியோர் சதம் அடித்ததும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ்வாக் இந்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆனார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக முகமது அசாருதீன் தலைமையில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று 4-ல் மண்ணை கவ்வியது. மற்றொரு போட்டி ‘டிரா’ ஆனது. இளம் வீரராக வந்த சச்சின் தெண்டுல்கர், உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் 111 ரன் விளாசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதே போல் சிட்னி டெஸ்டில் ரவிசாஸ்திரி 206 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவில் இரட்டை செஞ்சுரி அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். கபில்தேவ் 400 விக்கெட் மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இதை தவிர்த்து இந்த தொடரில் இந்தியாவுக்கு எல்லாமே ஏமாற்றத்திலேயே முடிந்தது. ஆஸ்திரேலிய சுழல் சூறாவளி, ஷேன் வார்னே இந்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார்.

சச்சின் தெண்டுல்கர் தலைமையில் சென்ற இந்திய அணிக்கு மூன்று டெஸ்டிலும் பலத்த அடி விழுந்தது. கேப்டன் தெண்டுல்கரை (278 ரன்) தவிர வேறு யாரும் ஜொலிக்க வில்லை. இந்த தொடரில் தெண்டுல்கரின் எல்.பி.டபிள்யூ. கிரிக்கெட் அரங்கில் பெருத்த சர்ச்சைக்கும், விவாதத்திற்கும் ஒன்றாக மாறியது. அடிலெய்டு டெஸ்டில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் வீசிய பந்து, எழும்பி செல்லும் என்று நினைத்து தெண்டுல்கர் குனிந்தார். ஆனால் தாழ்வாக வந்த பந்து அவரது கையை தாக்கியது. பந்து கையில் படாமல் இருந்திருந்தால் ஸ்டம்பை தாக்கியிருக்கும் என்று கருதிய நடுவர் எல்.பி.டபிள்யூ. வழங்கினார். இது நடுவரின் முட்டாள்தனமான முடிவு என்று அப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

4 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்திய அணிக்கு சவுரவ் கங்குலி கேப்டனாக பணியாற்றினார். இதில் அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலாவது இன்னிங்சில் 233 ரன்கள் குவித்த ராகுல் டிராவிட், 2-வது இன்னிங்சில் 72 ரன்கள் எடுத்து, 230 ரன்கள் இலக்கை எட்டுவதற்கும் வித்திட்டார். சிட்னி டெஸ்டில் சச்சின் தெண்டுல்கர் 241 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்த தொடரில் மொத்தம் 619 ரன்கள் சேர்த்த ராகுல் டிராவிட் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தொடரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. ஆஸ்திரேலிய வீரர் சைமன்ட்சை, இந்தியாவின் ஹர்பஜன்சிங் இனவெறியுடன் குரங்கு என்று திட்டியதாக எழுந்த பிரச்சினை இந்த பயணத்தில் தான் அரங்கேறியது. இந்த விவகாரத்தில் ஹர்பஜன்சிங்குக்கு மூன்று டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டதால், தொடரை புறக்கணிக்க போவதாக இந்திய தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டது. அப்பீலுக்கு பிறகு ஹர்பஜன்சிங் அபராதத்துடன் தப்பினார். அதன் தொடர்ச்சியாக பெர்த்தில் நடந்த 3-வது டெஸ்டில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. பெர்த்தில் வெற்றி கண்ட முதல் ஆசிய அணி என்ற வரலாறும் இந்தியா வசம் வந்து சேர்ந்தது. இந்திய அணிக்கு கும்பிளே கேப்டனாகவும், டோனி விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டனர்.

உலக சாம்பியன் மகுடத்தை சூடியதோடு சென்ற டோனி தலைமையிலான இந்திய அணியை 4 டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணியினர் தெறிக்கவிட்டனர். இதில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது. 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் முச்சதம் (329 ரன்) அடித்தார். இன்னொரு போட்டியில் டேவிட் வார்னர் 69 பந்துகளில் சதம் நொறுக்கினார். ஆஸ்திரேலியாவில் தெண்டுல்கர் ஆடிய கடைசி தொடர் இதுதான். அவர் 2 அரைசதம் உள்பட 287 ரன்கள் எடுத்தார். முச்சதம், இரட்டை சதம் என மொத்தம் 626 ரன்கள் எடுத்த கிளார்க் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த தொடரின் பாதியில் இந்திய கேப்டன் டோனி திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் கடைசி டெஸ்டுக்கு விராட் கோலி கேப்டனாக செயல்பட்டார். இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடிய ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் பந்து தாக்கி இறந்ததால், நிலைகுலைந்து போன ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த தொடர் முழுவதும் உணர்ச்சி வசப்பட்டனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டீவன் சுமித்தும் (4 சதத்துடன் 769 ரன்), இந்திய தரப்பில் விராட் கோலியும் (4 சதத்துடன் 692 ரன்) ரன்மழை பொழிந்து ரசிகர்களை பரவசப்படுத்தினர். கேப்டனாக ஒரே டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 2-வது வீரர் சிறப்பும் கோலிக்கு கிட்டியது. ஆஸ்திரேலியாவில் அதிக ரன்கள் சேர்த்த இந்தியர் என்ற சாதனையை கோலி படைத்தார். முதல் இரு டெஸ்டில் தோற்ற இந்தியா, கடைசி 2 டெஸ்டில் டிரா கண்டது.


Next Story