வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி


வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி
x
தினத்தந்தி 6 March 2019 10:15 PM GMT (Updated: 6 March 2019 9:24 PM GMT)

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கிராஸ் ஐலெட்,

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிராஸ் ஐலெட்டில் நேற்று நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன், வெஸ்ட்இண்டீஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் ஹோப் 6 ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 15 ரன்னிலும் (12 பந்துகளில் 2 சிக்சருடன்), ஹெட்மயர் 14 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இங்கிலாந்து அணி வெற்றி

4–வது விக்கெட்டுக்கு நிகோலஸ் பூரன், டேரன் பிராவோவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை ஒரளவு நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. டேரன் பிராவோ 28 ரன்னும், நிகோலஸ் பூரன் 58 ரன்னும் (37 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன்) எடுத்து ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. ஆஷ்லி நர்ஸ் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் டாம் குர்ரன் 4 விக்கெட்டும், கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பேர்ஸ்டோ 68 ரன்னும் (40 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன்), ஜோ டென்லி 30 ரன்னும் (29 பந்துகளில் 4 பவுண்டரியுடன்) சேர்த்து ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் ஷெல்டன் கோட்ரெல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அடுத்த ஆட்டம்

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாஸ்செட்டரில் இந்திய நேரப்படி நாளை மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story