இந்தியாவில் பிறந்து இந்தியர்களை மிரட்டிய அஜாஸ் படேல்! யார் இவர்..?


இந்தியாவில் பிறந்து இந்தியர்களை மிரட்டிய அஜாஸ் படேல்! யார் இவர்..?
x
தினத்தந்தி 4 Dec 2021 10:02 AM GMT (Updated: 4 Dec 2021 10:02 AM GMT)

அஜாஸ் படேல் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர்.

மும்பை,

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் மும்பை  வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணியின் சுழல் நாயகன் அஜாஸ் படேல் இந்திய பேட்ஸ்மென் அனைவரையும் தனது  மாயாஜால பந்துவீச்சால் பெவிலியனுக்கு அனுப்பி ஆச்சரியப்படுத்தினார்.

முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

இதன்மூலம், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர், இந்திய அணிக்கு எதிராக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை டிரா செய்ய உதவினார்.  இனி, அவரைப் பற்றி சற்று விரிவாக காணலாம்.  

‘அஜாஸ் யூனுஸ் படேல்’ எனும் இயற்பெயர் கொண்ட அஜாஸ் படேல்,  யூனுஸ் படேல் - ஷானாஸ் படேல் தம்பதியினருக்கு மகனாக 1988ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி பிறந்தார். அவருக்கு 2 சகோதரிகள் உள்ளனர். அவருடைய மனைவியின் பெயர் நிலோபர் படேல்.

அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்திடாத தகவல் ஆகும். அவருடைய பூர்வீகம் மும்பை ஆகும். அவர் தன்னுடைய 8 வயதில் மும்பையிலிருந்து நியூசிலாந்துக்கு தனது குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்தார்.

33 வயதான அஜாஸ் படேல் நியூசிலாந்து அணிக்காக தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2018ம் ஆண்டு அறிமுகமானார். முதலில் இவர் இடது கை வேகப்பந்துவீச்சாளராக இருந்தார். பின் இடது கை சுழற்பந்து வீச்சாளராக மாற்றிக் கொண்டார்.

2015-16ம் ஆண்டுக்கான நியூசிலாந்து உள்ளூர் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்தவர்.

அதனை தொடர்ந்து, 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற , நியூசிலாந்து கிரிக்கெட் விருதுக்கான பட்டியலில்  ‘சிறந்த உள்ளூர் வீரருக்கான விருதை’ தட்டிச் சென்றார். 

அவருடைய அசத்தலான பந்துவீச்சு திறமையால், 2018ம் ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான நியூசிலாந்து  டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக நவம்பர் 16, 2018ல் பாகிஸ்தானுக்கு எதிராக தனது இன்னிங்சை தொடங்கினார். அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவருடைய சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இதன்மூலம், அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 

அதன்பின், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்போது இடம்பெற்று அசத்தி வருகிறார்.

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, 1956ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் ஜிம் லேக்கர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்தார்.

அதன்பின், 1999ம் ஆண்டு இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்தார். இவர்களை தொடர்ந்து இந்த சாதனை பட்டியலில் மூன்றாவது வீரராக அஜாஸ் படேலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அனில் கும்ப்ளே தனது டுவிட்டர் பதிவில், “சாதனை பட்டியலுக்கு வரவேற்கிறேன், சிறப்பாக பந்துவீசினீர்கள்” என்று வாழ்த்தி உள்ளார்.


'தன்னுடைய இளம் வயதில் கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளித்த வான்கடே மைதானத்தில், ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை நிகழ்த்தி இருப்பது மிகவும் சிறப்பானது' என்று அஜாஸ் படேல் தெரிவித்துள்ளார்.

Next Story