2024 டி20 உலகக்கோப்பை: சிராஜ், பும்ராவை விட இவர்தான் இந்தியாவின் துருப்புச்சீட்டு பவுலராக இருப்பார் - ஜாஹீர் கான்


2024 டி20 உலகக்கோப்பை: சிராஜ், பும்ராவை விட இவர்தான் இந்தியாவின் துருப்புச்சீட்டு பவுலராக இருப்பார் - ஜாஹீர் கான்
x

Image Courtesy: Indian Premier League

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.

மும்பை,

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. அதன்படி தொடரில் கலந்து கொள்ள இருக்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதில் குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், நமீபியா அணிகளும், குரூப் சி-யில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா,பாப்புவா நியூ கினியா அணிகளும், குரூப் டி-யில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் பும்ரா, சிராஜ் ஆகியோருடன் உலகக்கோப்பையில் விளையாடப் போகும் 3வது வேகப்பந்து வீச்சாளர் யார் என்பது இப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இந்நிலையில் மிகவும் அனுபவமிகுந்த முகமது ஷமி இந்தியாவின் துருப்பு சீட்டு பவுலராக செயல்படும் திறமையை கொண்டிருப்பதாக இந்திய முன்னாள் வீரர் ஜாஹீர் கான் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பும்ரா, சிராஜ் ஆகியோர் கண்டிப்பாக உலகக்கோப்பையில் விளையாடுவார்கள். அவர்களுடன் அர்ஷ்தீப் சிங் இருக்கலாம். இடது கை பவுலரான அவர் நல்ல வேரியேசன்களை கொண்டுள்ளார். அவர் நல்ல யார்கர் பந்துகளையும் வீசும் திறமையை கொண்டுள்ளது கூடுதல் பலத்தை சேர்க்கும்.

அதே சமயம் காயத்திலிருந்து குணமடைந்து தேர்வுக்கு தயாராக இருந்தால் முகமது ஷமி விளையாட வேண்டும் என நான் நினைக்கிறேன். 2023 உலகக்கோப்பையில் அவர் அணியின் துருப்புச் சீட்டாக இருந்தார். எனவே இந்த 4 வேகப்பந்து வீச்சாளர்களையும் (பும்ரா, சிராஜ், ஷமி, அர்ஷ்தீப்) நான் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story