2வது ஒருநாள் போட்டி; ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை..
3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இலங்கை தொடரை கைப்பற்றியது.
பல்லேகலே,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி பல்லேகலேவில் நேற்று நடைபெற்றது.இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய நிசாங்கா 18 ரன், பெர்னாண்டோ 5 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.இதையடுத்து குசல் மெண்டிஸ் மற்றும் சதீரா சமரவிக்ரமா ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடி, அரைசதம் அடித்து அசத்தினர். இதில் மெண்டிஸ் 61 ரன்னிலும், சம்ரவிக்ரமா 52 ரன்னிலும் அவுட் ஆகினர்.இதையடுத்து சரித் அசலங்கா மற்றும் ஜனித் லியனகே இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஜனித் லியனகே அரைசதம் அடித்த நிலையில் 50 ரன்னில் அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அசலங்கா 74 பந்துகளில் 97 ரன்கள் அடித்து அசத்தினார்.
இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மத்துல்லா ஓமர்சாய் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 309 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது. தொடக்கத்தில் குர்பாஸ் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து இப்ராஹிம் சத்ரன் , ரஹ்மத் ஷா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.
தொடர்ந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்த இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பின்னர் இப்ராஹிம் சத்ரன் 54 ரன்களும் , ரஹ்மத் ஷா 63 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர் .
தொடர்ந்து வந்த வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 153 ரன்களில் 10விக்கெட்டுகளையும் இழந்து ஆப்கானிஸ்தான் அணி ஆட்டமிழந்தது. இலங்கை அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இலங்கை தொடரை கைப்பற்றியது.