ஹர்மன்பிரீத் கவுர் அதிரடி : இலங்கை அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அபார வெற்றி


ஹர்மன்பிரீத் கவுர் அதிரடி : இலங்கை அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அபார வெற்றி
x

Image Tweeted By @BCCIWomen

இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

பல்லேகல்லே,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லேகல்லே மைதனத்தில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மாவும், ஸ்மிருதி மந்தனாவும் களமிறங்கினர். ஸ்மிருதி மந்தனா 6 ரன்களில் அவுட்டானார். ஷபாலி வர்மா 49 ரன்களில் ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார்.

யாசிகா பாட்டியா 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பின்வரிசையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 75 ரன்களும், பூஜா 56 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

அணியின் தொடக்க வீராங்கனை விஷ்மி 3 ரன்களில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீராங்கனை சமாரி அட்டப்பட்டு 44 ரன்கள் எடுத்து ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சில் வஸ்ட்ராகரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹாசினி 39 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அணியின் மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தனர். இறுதியில் இலங்கை அணி 47.3 ஓவர்களில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் நிலாக்ஷி 48 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் மூலம் இந்திய பெண்கள் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.


Next Story