கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் தொடர்ச்சியாக 4வது சதம்...ஹசிம் அம்லாவின் சாதனையை சமன் செய்த விராட் கோலி...!


கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் தொடர்ச்சியாக 4வது சதம்...ஹசிம் அம்லாவின் சாதனையை சமன் செய்த விராட் கோலி...!
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 12 Sep 2023 1:41 AM GMT (Updated: 12 Sep 2023 5:04 AM GMT)

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றுக்கு தகுதி கண்டுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன் தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் பாதியில் நின்று போன ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்தது. கோலி 122 ரன், ராகுல் 111 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதையடுத்து 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்னில் அடங்கியது. ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா காயத்தால் பேட் செய்யவில்லை. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.

இந்த ஆட்டத்தில் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஹசிம் அம்லாவின் சாதனை ஒன்றை கோலி சமன் செய்துள்ளார். அதாவது கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் கோலி தொடர்ச்சியாக நொறுக்கிய 4-வது சதம் இதுவாகும். ஏற்கனவே இங்கு கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் சதம் ( 128 ரன், 131 ரன் மற்றும் 110 ரன்) அடித்திருந்தார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் தொடர்ச்சியாக அதிக சதம் அடித்து இருந்த தென்ஆப்பிரிக்க வீரர் ஹாசிம் அம்லாவின் (செஞ்சூரியனில் 4 சதம்) சாதனையை சமன் செய்தார்.


Next Story