ஒரே போட்டியில் 7 விக்கெட்டுகள்: பல்வேறு சாதனைகளை படைத்துள்ள முகமது ஷமி


ஒரே போட்டியில் 7 விக்கெட்டுகள்: பல்வேறு சாதனைகளை படைத்துள்ள முகமது ஷமி
x

ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்திய பவுலர் என்ற சாதனையை ஷமி படைத்துள்ளார்.

மும்பை,

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த ஆட்டத்தை பொறுத்தவரை, பேட்டிங்கில் ஸ்ரேயஸ் அய்யர், கோலி, கில் ஆகியோர் சிறந்த பங்களிப்பை அளித்த நிலையில், பந்துவீச்சில் முகமது ஷமி அசத்தினார். அவர் நேற்றைய ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி எதிரணியை மிரட்டினார்.

இதன் மூலம் அவர் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் 3 இன்னிங்ஸில் 5+ விக்கெட்களை ஷமி கைப்பற்றி உள்ளார். உலகக் கோப்பையில் அதிக முறை 5+ விக்கெட்களை கைப்பற்றிய வீரராகவும் அவர் (ஒட்டுமொத்தமாக 4 முறை) திகழ்கிறார்.

நடப்பு உலகக் கோப்பையில் 23 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரராக உள்ளார். உலக அளவில் இந்த பட்டியலில் மிட்சேல் ஸ்டார்க் (27) முதலிடத்தில் உள்ளார். இறுதிப்போட்டியில் ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினால் இந்த சாதனையையும் முறியடித்துவிடுவார்.

ஒருநாள் போட்டியில் ஒரே ஆட்டத்தில் 7 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய பவுலர் என்ற சாதனையை ஷமி படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியது கிடையாது.

பந்துவீச்சில் ஜொலித்த முகமது ஷமிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில்," "நான் எனது தருனத்திற்காக காத்திருந்தேன். குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் நான் அதிகம் விளையாடவில்லை. நாங்கள் யார்க்கர் மற்றும் ஸ்லோயர் பந்துகள் போன்ற பல விஷயங்கள் குறித்து பேசினோம். புதிய பந்தில் விக்கெட்களை வீழ்த்த முயற்சித்தேன். அதற்காக நிறைய பயிற்சி செய்தேன்.

இந்தப் போட்டியில் கேன் வில்லியம்சனின் கேட்ச்சை நழுவ விட்டேன். அப்போது மிகவும் மோசமான மன நிலையில் இருந்தேன். அவர்கள் சிறப்பாக பேட் செய்தனர். விக்கெட் சிறப்பாக இருந்தது. நாங்கள் பதிவு செய்த ரன்கள் போதுமானதாக இருந்தது. மைதானத்தில் பனிப்பொழிவு இல்லை. இது சிறந்த பிளாட்பார்ம். நாங்கள் 2015 மற்றும் 2019 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில் தோல்வியை தழுவினோம். எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பினேன். ஏனெனில், மீண்டும் இது போன்ற வாய்ப்பு நமக்கு எப்போது வரும் என்று தெரியாது" என ஷமி பேசினார்.


Next Story