ஐசிசி கொண்டு வந்த அதிரடி மாற்றம் - மன்கட் ரன் அவுட் முறைக்கு அனுமதி


ஐசிசி கொண்டு வந்த அதிரடி மாற்றம் - மன்கட் ரன் அவுட் முறைக்கு அனுமதி
x

கோப்புப்படம்

புதிய விளையாட்டு விதிமுறைகளை ஐசிசி ஆடவர் கிரிக்கெட் கமிட்டி குழு பரிந்துரைத்துள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கிரிக்கெட் விளையாட்டில் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 1ந் தேதி முதல் அமல்படுத்தப்படும். கிரிக்கெட் பந்தை பாலிஷ் செய்ய உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு தடை, நான்-ஸ்ட்ரைக்கரை ரன் அவுட் செய்வது அதிகாரபூர்வமானது உட்பட பல்வேறு புதிய விதிகளை ஐசிசி அமல்படுத்த உள்ளது.

புதிய விதிமுறைகள்:-

உமிழ்நீருக்கு நிரந்தர தடை:- கிரிக்கெட் பந்தை பளபளக்க வைக்க வீரர்கள் உமிழ்நீரை பயன்படுத்தி வந்தனர். அதன்பின்னர் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐசிசி அதற்கு தடை விதித்தது. இப்போது அந்த விதியை ஐசிசி நிரந்தரமாக்கி உள்ளது. இதனால் இனிமேல் வீரர்கள் பந்தை பளபளக்க செய்ய இனி உமிழ்நீரை பயன்படுத்த முடியாது.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரர் அவுட் ஆன பின்னர் புதிதாக களத்திற்கு வரும் வீரர் பந்தை எதிர்கொள்ள தயாராக முன்பு 3 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அது 2 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட்டில் இந்த விதிமுறை 90 வினாடிகளாக உள்ளது. அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

நான்-ஸ்ட்ரைக்கரை ரன் அவுட் செய்வது அதிகாரபூர்வமானது:- பந்துவீச்சாளர்கள் பந்துவீச வரும் போது நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் உள்ள பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியே வந்து ரன் ஓடுவதற்கு தயாராக இருப்பார்கள். பந்துவீச்சாளர்கள் அதனை கவனித்தால் அவர்கள் ரன் அவுட் செய்யலாம். ஆனால் இந்த முறை நியாயமற்றதாக பார்க்கப்பட்டது. இந்திய வீரர் அஷ்வின் ஐபிஎல்லில் பட்லரை இந்த முறையில் அவுட் செய்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இப்போது இந்த முறை அஅதிகாரப்பூர்வ ரன் அவுட்டாக மாற்றப்பட்டுள்ளது.

கிராஸ் ஓவர் செல்லாது:- ஸ்ட்ரைக்கில் இருக்கும் பேட்ஸ்மேன் கேட்ச் முறையில் அவுட் ஆனால் எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேன்களை கிராஸ் செய்வது வழக்கம். புதிதாக வரும் பேட்ஸ்மேன் நேரடியாக ஸ்ட்ரைக் எடுப்பதை தவிர்க்கவும், ஆட்ட சூழலை புரிந்து கொள்ளவும் இது உதவும். தற்போது இந்த முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி பேட்ஸ்மேன்கள் ஒருவரை ஒருவர் கடந்திருந்தாலும் புதிதாக களத்திற்கு வரும் பேட்ஸ்மேன்தான் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்ஸ்மேன்களின் கவனத்தை குலைக்கும் வகையில் பந்துவீச்சாளர் பந்து வீச ரன் அப்பில் இருக்கும் போது ஏதேனும் செய்தால் நடுவர்கள் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல பவுலர் பந்து வீசுவதற்கு முன்னர் பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியேறி விக்கெட்டுக்கு முன்னாள் வந்தால் பவுலர்கள் பந்தை டெலிவரி செய்வதற்கு முன்னர் த்ரோ செய்து பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்யலாம். இனி அப்படி செய்தால் அது டெட் பாலாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டி20 கிரிக்கெட்டில் அமலில் உள்ள ஸ்லோ ஓவர் ரேட் முறை ஒருநாள் கிரிக்கெட்டிலும் வரும் 2023 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விளையாட்டு விதிமுறைகளை சவுரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி ஆடவர் கிரிக்கெட் கமிட்டி குழு பரிந்துரைத்துள்ளது. இந்த விதிகள் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.


Next Story