'உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் செயல்பாடு மிக அபாரமாக உள்ளது' - சச்சின் தெண்டுல்கர் பாராட்டு


உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் செயல்பாடு மிக அபாரமாக உள்ளது - சச்சின் தெண்டுல்கர் பாராட்டு
x

உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் செயல்பாடு மிக அபாரமாக உள்ளது என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

பாகிஸ்தானை முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்த மகிழ்ச்சியான தருணத்தை ஆப்கானிஸ்தானில் ரசிகர்கள் 'ஜிந்தாபாத்' முழக்கத்தோடு கொண்டாடினர். வீரர்கள் தங்களுக்குரிய பஸ்சில் லுங்கி டான்ஸ் பாடலுக்கு ஆட்டம் பாட்டத்துடன் அமர்க்களப்படுத்தினர். இன்னொரு பக்கம் அவர்களுக்கு பாராட்டுகளும் குவிகிறது.

இந்திய முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது சமூக வலைதள பதிவில், 'உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் செயல்பாடு மிக அபாரமாக உள்ளது. கட்டுக்கோப்பான பேட்டிங், களத்தில் அவர்களது போராடும் குணம், ரன்எடுக்க ஓடுவதில் வெளிப்படும் ஆக்ரோஷம் அவர்களது கடின உழைப்பை பிரதிபலிக்கிறது. நிச்சயமாக இது அஜய் ஜடேஜாவின் தாக்கத்தினால் மட்டுமே இருக்க முடியும். வலிமையான பந்து வீச்சுடன், இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக பெற்றுள்ள வெற்றி புதிய ஆப்கானிஸ்தான் அணி உருவாகி இருக்கிறது என்பதை காட்டுகிறது. கிரிக்கெட் உலகம் இதை கவனத்தில் கொள்கிறது' என்று கூறியுள்ளார்.

இந்திய முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா உலகக் கோப்பை போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக உள்ளார். 1996-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்இறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக 25 பந்தில் 45 ரன் திரட்டி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட ஜடேஜா, இப்போது அதே பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணிக்கு வழிகாட்டியாக இருந்து வெற்றிக்கு அழைத்து சென்றுள்ளார்.


Next Story