ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் மெதுவாக பந்துவீச்சு: சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா - ஐ.சி.சி.க்கு கவாஜா கண்டனம்


ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் மெதுவாக பந்துவீச்சு: சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா - ஐ.சி.சி.க்கு கவாஜா கண்டனம்
x

Image Courtesy : @englandcricket twitter

தினத்தந்தி 2 Aug 2023 8:38 PM GMT (Updated: 3 Aug 2023 10:11 AM GMT)

ஐ.சி.சி.யின் திருத்தப்பட்ட புதிய விதிப்படி தாமதமாக பந்து வீசும் ஒவ்வொரு ஓவருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஒரு புள்ளி கழிக்கப்படும்.

துபாய்,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையே அனல் பறந்த 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடரில் இரு அணியினரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காமல் தாமதப்படுத்தியதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கண்டறிந்துள்ளது.

இங்கிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் 5 டெஸ்டுகளில் 4-ல் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதில் லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் மட்டும் 9 ஓவர்களை வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்து இருக்கிறார்கள். மொத்தத்தில் அந்த அணி 4 டெஸ்டையும் சேர்த்து 19 ஓவர்கள் தாமதமாக வீசியிருக்கிறது.

இதே போல் ஆஸ்திரேலிய அணி ஒரே ஒரு டெஸ்டில் மட்டும் இந்த தவறை செய்திருக்கிறது. அந்த அணி மான்செஸ்டரில் மழையால் டிராவில் முடிந்த 4-வது டெஸ்டில் மட்டும் 10 ஓவர்கள் மெதுவாக வீசியிருக்கிறது.

ஐ.சி.சி.யின் திருத்தப்பட்ட புதிய விதிப்படி தாமதமாக பந்து வீசும் ஒவ்வொரு ஓவருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஒரு புள்ளி கழிக்கப்படும். அத்துடன் ஒரு ஓவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து அணிக்கு 5 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும்.

இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 28 புள்ளிகள் சேர்த்து இருந்தது. அதில் 19 புள்ளிகளை அபராதமாக இழந்து, இப்போது அதன் புள்ளி எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது. இதே போல் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி 28-ல் இருந்து 18- ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 100 சதவீத புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்தியா 66.67 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 30 சதவீத புள்ளியுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 15 சதவீத புள்ளியுடன் 5-வது இடத்திலும் உள்ளன.

ஐ.சி.சி.யின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ள ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா தனது டுவிட்டர் பக்கத்தில், 'மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்டில் இரு நாட்கள் பெய்த மழை காரணமாக 2-வது இன்னிங்சில் எங்களுக்கு பந்து வீச கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் ஐ.சி.சி., பந்துவீச்சில் தாமதம் செய்ததாக கூறி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்து 10 புள்ளிகளை எங்களிடம் இருந்து பறித்துள்ளது. இது எப்படி நியாயமானது என்று தெரியவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story