ஆசிய கோப்பை: காயம் அடைந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்ப்பு - பிசிசிஐ


ஆசிய கோப்பை: காயம் அடைந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்ப்பு - பிசிசிஐ
x

ஆசிய கோப்பை அணியில் இருந்து காயம் அடைந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

துபாய்,

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது.

முன்னதாக 4 புள்ளிகளுடன் 'ஏ'பிரிவில் முதலிடத்தை பிடித்த இந்தியா சூப்பர்4 சுற்றுக்கும் முன்னேறியது. சூப்பர்4 சுற்று போட்டிகள் நாளை துவங்குகிறது. அதில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் சூப்பர் 4 தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஹாங்காங் போட்டியில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்த சூழலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவர் தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.

ஜடேஜாவின் விலகல் இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022ல் இருந்து ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்


Next Story